இயந்திரக் கோளாறு.. டெல்லியில் 161 பயணிகளுடன் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்.. திக் திக் நிமிடங்கள்!!
IndiGo Flight Makes Emergency Landing: இந்த விமானம் துருக்கியைச் சேர்ந்த 'கொரெண்டன் ஏர்லைன்ஸ்' (Corendon Airlines) நிறுவனத்திடம் இருந்து இண்டிகோ நிறுவனத்தால் குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு (Wet-leased) எடுக்கப்பட்டதாகும். இண்டிகோ நிறுவனம் தற்போது இத்தகைய 5 விமானங்களை இயக்கி வருகிறது.

Indigo Flight
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 161 பயணிகளுடன் டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானம், சனிக்கிழமை காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக விமானிகளின் சாதுர்ய முயற்சியால் பயணிகள் அனைவரும் சிறு காயமுமின்றி உயிர் தப்பினர்.
இதையும் படிக்க : இந்தியா முழுவதும் எரிவாயு பைப்லைன் விரிவாக்கம்.. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த உத்தரவு..
நடந்தது என்ன?
இண்டிகோ நிறுவனத்தின் ‘6E 579’ என்ற எண் கொண்ட இந்த விமானம் (போயிங் 737 ரகம்), விசாகப்பட்டினத்தில் இருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்தது. டெல்லி விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானத்தின் ஒரு இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ‘முழு அவசரநிலை’ (Full Emergency) பிரகடனப்படுத்தப்பட்டது.
பயணிகள் காயமின்றி மீட்பு:
இன்று காலை 10.54 மணியளவில் அவசர தரையிறக்கம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அதிலிருந்த 161 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானம்:
இந்த விமானம் துருக்கியைச் சேர்ந்த ‘கொரெண்டன் ஏர்லைன்ஸ்’ (Corendon Airlines) நிறுவனத்திடம் இருந்து இண்டிகோ நிறுவனத்தால் குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு (Wet-leased) எடுக்கப்பட்டதாகும். இண்டிகோ நிறுவனம் தற்போது இத்தகைய 5 விமானங்களை இயக்கி வருகிறது.
இதையும் படிக்க : நீடிக்கும் போர் பதற்றம்.. எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்!!
இண்டிகோ கொடுத்த விளக்கம்:
இது குறித்து இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் விமானிகள் முன்னுரிமை அடிப்படையில் தரையிறக்கக் கோரினர். பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே எங்களது முக்கிய முன்னுரிமை. தற்போது அந்த விமானம் விரிவான பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.