டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் புதிய வரலாறு.. விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!
Republic Day parade: இந்த ஆண்டு புதுமையாக, விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்
டெல்லி, ஜனவரி 01: டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், முதல் முறையாக விலங்குகள் படைப்பிரிவு இந்த முறை அணிவகுத்துச் செல்கிறது. நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவையும் அப்போது நடைபெறும். இதேபோன்று, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.
மேலும் படிக்க: 2025ன் கடைசி ‘மன் கி பாத்’.. ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்!
அணிவகுப்பு ஊர்வலம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள ‘கடமைப்பாதை’யில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் ராணுவத்தின் மூன்றுபடை வீரர்கள், தேசிய மாணவர் படையினர், போலீஸ் படையினர், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், குறிப்பாக வான்வழி சாகசங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்கிறது.
பனிப்பொழிவில் ஒத்திகை:
குடியரசு தின விழாவையொட்டி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுத படைகள் டெல்லி கடமை பாதையில் கடும் குளிருக்கு மத்தியில், குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
விலங்குகள் படைப்பிரிவு:
இந்த ஆண்டு புதுமையாக, விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறுகின்றன. இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலையேற்ற குதிரைகள் இமயமலைப் பகுதிகளில் கடும் குளிரிலும் பாரங்களை சுமந்து பயணம் செய்யும் திறன் கொண்டவை ஆகும். அந்த ஒட்டகங்கள் 250 கிலோ வரை, குதிரைகள் 50 முதல் 60 கிலோ வரை எடையை எடுத்துச் செல்லும்.
மேலும் படிக்க: வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் INSV கவுண்டின்யா – பிரதமர் மோடி பெருமிதம்..
சிப்பிப்பாறை போன்ற தமிழ்நாட்டு நாய் இனங்கள்:
மேலும், ராப்டர் பறவைகள் எதிரிகளை கண்காணிக்கும் திறன் கொண்டவை. 16 நாய்களில் சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழ்நாட்டு நாய் இனங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பமானது. இந்த விலங்குகள் படைப்பிரிவை இரட்டைத்திமில் ஒட்டகங்கள் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.