நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!
Tamil Nadu MPs Strongly Oppose: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர். இது சபையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

கருப்பு உடையில் தமிழக எம்.பிக்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16, 2026) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில், நாட்டின் எதிர்கால அரசியல் சூழலையே மாற்றியமைக்கக்கூடிய ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் எனத் தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நீட்சியாக இந்த 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்கள் தாக்கல்:
அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா: இது மகளிர் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்தவும், அதற்கு ஏதுவாக மக்களவைத் தொகுதிகளை 850 ஆக அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா-2026: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்கும் நடைமுறையைத் தொடங்குகிறது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா: இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
வாக்கெடுப்பும் – திமுகவின் எதிர்ப்பும்:
மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமுள்ள 543 எம்பிக்களில் 333 பேர் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் கிடைத்தன. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், “2023-இல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால், அதனுடன் தொகுதி மறுவரையறையை இணைப்பதைச் சமரசமின்றி எதிர்க்கிறோம்” என்று முழங்கினார்.
கருப்பு உடை அணிந்து தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர். இது சபையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
தென் மாநிலங்களின் அச்சம் என்ன?
இந்த மசோதா அமலுக்கு வந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறையும். அதே சமயம், மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்குத் தொகுதிகள் கணிசமாக உயரும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை ஒடுக்கும் முயற்சி என்றும் எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
தமிழகம் தழுவிய போராட்டங்கள்:
நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பிய அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு இந்த மசோதாவை “நாட்டின் வளர்ச்சி மற்றும் சமமான பிரதிநிதித்துவத்திற்கான ஒரு வரலாற்று நகர்வு” என்று வர்ணிக்கிறது. இருப்பினும், காங்கிரஸ் எம்பி வேணுகோபால், “பாஜக அரசியல் சாசனத்தையே கபளீகரம் செய்ய நினைக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!
இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்திய நாடாளுமன்றத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறும். 543 ஆக உள்ள தொகுதிகள் 850 ஆக அதிகரிக்கும் போது, அது மாநிலங்களுக்கு இடையேயான அரசியல் சமநிலையை எவ்விதம் பாதிக்கும் என்பது வரும் நாட்களில் விவாதப் பொருளாக இருக்கும்.