சர்ச்சை வீடியோவால் தற்கொலை.. பேருந்தில் அட்டைப் பெட்டிகளுடன் பயணித்து ஆண்கள் போராட்டம்..
Cardboard box protest on Kerala buses: பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி, சில ஆண்கள் 'ரீல்ஸ்' மோகத்தில் பல வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி, பதிவிட்டு வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்டைப் பெட்டிகளுடன் பயணிக்கும் ஆண்கள்.
கேரளா, ஜனவரி 22: கோழிக்கோட்டில் ஒரு இளம்பெண்ணின் பொறுப்பற்ற செயலால் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்யும் ஆண்கள் தங்கள் உடல்களை அட்டைப் பெட்டிகளால் மூடியபடி செல்லும் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடை ஊழியரின் மரணம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர், அவரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் யூடியூபரும், சோசியல் மீடியா இன்புளுயன்சருமான பெண்ணை கேரள காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..
இளம்பெண் பதிவிட்ட வீடியோ:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (32). இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இம்மாதம் 9ஆம் தேதி, அவர் பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்தார்.அப்போது, ஒரு இளம்பெண் தீபக்கின் படத்துடன், அவர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி 23 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது.
தீபக் தற்கொலை:
இதையடுத்து, அந்த இளம்பெண் பதிவிட்ட வீடியோ தொடர்பாக வடகரை காவல்துறையினர் தீபக்கை அவரது கைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, இந்த வீடியோவை தீபக்கிற்கு பகிர்ந்து பலரும் பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து, அவரை மிக மோசமாக வசைபாடியதாகத் தெரிகிறது. மேலும், அப்பெண் பகிர்ந்த வீடியோவை பார்த்த பலர், தங்களது சமூக வலைதளங்களில் பக்கம் பக்கமாக தீபக்கை விமர்சித்து பிதிவிட தொடங்கினர். இந்த அவமானத்தையும் வலியையும் தாங்கிக்கொள்ள முடியாத தீபக், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தீபக்கை விமர்சித்தவர்கள் பெண்ணை விமர்சனம்:
அவ்வளவு நேரம் தீபக்கை விமர்சித்து வந்த நெட்டிசன்கள், அவரது தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் பதிவிட்ட வீடியோவை விமர்சிக்கத் தொடங்கினர். அதாவது, அந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட தீபக் மீது அந்தப் பெண் வேண்டுமென்றே உரசுவது போன்ற காட்சிகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பெண் மீது தான் முழு தவறு, அவரே நாடகமாடியுள்ளார் என தீபக்கை விமர்சிக்க பயண்படுத்திய அதே கடும் சொற்களால், வசைபாடி வருகின்றனர். இப்படி, யார் சரி, யார் தவறு என்பதை அறிய, காவல் நிலையமும், நீதிமன்றமும், சட்டமும் இருந்தும் மக்களே தங்கள் கையில் சாட்டையை எடுத்து, சமூக வலைதளங்களில் நீதிபதிகளாக உடனடி தண்டனை கொடுத்து வருகின்றனர். இதன் விளைவு நாம் இழந்தது ஓர் சாமானியனின் உயிரை.
இதையும் படிங்க: லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
அட்டைப் பெட்டியுடன் பயணிக்கும் ஆண்கள்:
Kerala Men traveling in bus from today 🚍 pic.twitter.com/vsvnivkHgk
— Deepu (@deepu_drops) January 19, 2026
இதற்கிடையில், பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி, சில ஆண்கள் ‘ரீல்ஸ்’ மோகத்தில் பல வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி, பதிவிட்டு வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி, சில ஆண்கள் தங்கள் உடல்களை அட்டைப் பெட்டிகளால் மூடியபடி பேருந்துகளில் பயணம் செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு காட்சியில், ஒரு நபர் கூண்டு போன்ற அட்டைப் பெட்டிக்குள் நின்றபடி பேருந்தில் பயணம் செய்கிறார்.
வைரலாகும் ஆண்கள் போராட்டம் வீடியோக்கள்:
Even the bus conductors are not safe from sicko females. https://t.co/yhm9dZlBQ2 pic.twitter.com/OLEAkSdxa7
— 𝕂𝕂 (@Try2StopME) January 20, 2026
இது தவிர, கேரள அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நடத்துநர் வெளியிட்ட வீடியோவில், அவர் தன் உடலில் அட்டைப் பெட்டிகளை அணிந்துகொண்டு பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் அணிந்திருந்த அட்டைப் பெட்டியில், “ஆண்களுக்கான ஆணையத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார். இதுபோன்று பல்வேறு விதங்களில் உருவாக்கப்பட்ட பல ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.