அகமதாபாத் விமான விபத்து – ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்பு – வெளியாகும் காரணம்?

Black Box Found : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் ஒருவரைத் தவிர பயணித்த 241 பேரும் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் முக்கிய தடையமாக விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் விமான விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகமதாபாத் விமான விபத்து - ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ் மீட்பு - வெளியாகும் காரணம்?

விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிப்பு

Published: 

13 Jun 2025 18:26 PM

குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா (Air India) போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிளாக் பாக்ஸ் (Black Box) மீட்கப்பட்டுள்ளது. இந்த பிளாக் பாக்ஸ், விமானத்தில் எளிதில் அழிக்க முடியாதவாறு கட்டமைக்கப்பட்டிருப்பதுடன், விமானத்தின் செயல்பாடுகள் மற்றும் கடந்த தருணங்களைப் பற்றிய தகவல்களை மின்னணு பதிவுகளாக கொண்டிருக்கும். இந்த பிளாக் பாக்ஸ், விமானம் மோதி விழுந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியின் கூரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்கு உள்ளாகியது. இதில் 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில் பிளாக் பாக்ஸ் கிடைத்துள்ள நிலையில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?

பிளாக் பாக்ஸ் ஆனது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1.  டிஜிட்டல் ஃபிளைட் டேட்டா ரெகார்டர் (Digital Flight Data Recorder) விமானம் பறந்த உயரம், வேகம், எஞ்சின் செயல்திறன் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களை பதிவு செய்யும்.
  2. இதில் உள்ள காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (Cockpit Voice Recorder) பயண நேரத்தில் பைலட்டுகளின் உரையாடல்கள், விமான நிலையத்துடன் நடந்த உரையாடல்கள் உள்ளிட்டவை இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனால் விபத்து குறித்தும் விமானத்தின் நிலை குறித்தும் பைலட்டுகள் பேசியிருந்தால் அது தெளிவாக பதிவாகியிருக்கும்.

மேலும் இந்த பிளாக் பாக்ஸ் குளிரூட்டப்பட்ட எஃகு, டைட்டேனியம் போன்ற சக்திவாய்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டிருப்பதால், தீ, வெடிப்பு, நீர் மற்றும் அதீத வெப்பநிலையிலும் பாதிப்பை சந்திக்காமல் அப்படியே இருக்கும். இதனால் விமானம் சேதமடைந்தாலும் இந்த பிளாக் பாக்ஸிற்கு ஒன்றும் ஆகாது.

வெளியாகும் காரணம்?

இந்த பிளாக் பாக்ஸ் சாதனத்தை இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு மற்றும் குஜராத் மாநில அரசு சார்பாக 40 பேர் கொண்ட குழுவினர் இணைந்து மீட்டுள்ளனர். இது தற்போது ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள தரவுகள் மூலம் விமான விபத்திற்கான காரணங்களை தெளிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

பிளாக் பாக்ஸ் கண்டுபிடிப்பு

 

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விமான விபத்து விசாரணை நிபுணர்கள் அகமதாபாத் வந்துள்ளனர். இது தொடர்பாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறுகையில், சாதாரணமாக துவங்கிய இந்த விமான பயணம் எதனால், பேரழிவாக மாறியது என்பதை கண்டறிய நிபுணர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.