அயோத்தியில் ராமர் கோயில் – பீகாரில் சீதா தேவி கோயில்.. புகைப்படங்களை பகிர்ந்த முதல்வர் நிதீஷ் குமார்..

Bihar Sita Temple: அயோத்தியில் ராமர் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளதை போல் பீகாரில் சீதா தேவி கோயில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சீதா அன்னையின் பிறப்பிடமான சீதாமர்ஹியில் உள்ள புனௌரா தாம்-இன் விரிவான வளர்ச்சிக்கான வடிவமைப்பு இப்போது நிறைவடைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்,

அயோத்தியில் ராமர் கோயில் - பீகாரில் சீதா தேவி கோயில்.. புகைப்படங்களை பகிர்ந்த முதல்வர் நிதீஷ் குமார்..

சீதா தேவி கோயில்

Published: 

23 Jun 2025 12:34 PM

சீதா தேவியின் பிறப்பிடமாக நம்பப்படும் சீதாமர்ஹி மாவட்டத்திற்கு அருகிலுள்ள புனௌரா தாம் பகுதியில் கட்டப்படவுள்ள ஜானகி மந்திரின் வடிவமைப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அதாவது ஜூன் 22, 2025 அன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் 2023 முதல் நடைபெற்று வரும் புனௌரா தாம் பகுதியில் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஒரு கோயில் அறக்கட்டளை அமைக்கப்படும் என்றும் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார். பீகார் மாநிலத்தின் சீதாமர்ஹி மாவட்டதில் உள்ள புனௌரா தாம் பகுதியில், கடவுள் ராமரின் மனைவி சீதா தேவி பிறந்ததாக நம்பப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் – பீகாரில் சீதா தேவி கோயில்:

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்பட்டதை போன்று, புனௌரா தாமில் சீதா தேவிக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், பிரமாண்ட கோயிலுக்கான திட்ட விவரங்கள் தயாராகிவிட்டதாக, அதுதொடர்பான புகைப்படங்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட வடிவமைப்பில் தயாராகும் சீதா தேவி கோயில் – முதலமைச்சர் நிதீஷ் குமார்


சமூக ஊடகங்களில் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ் குமார், “சீதா அன்னையின் பிறப்பிடமான சீதாமர்ஹியில் உள்ள புனௌரா தாம்-இன் விரிவான வளர்ச்சிக்கான வடிவமைப்பு இப்போது நிறைவடைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வடிவமைப்பில் ஒரு பிரமாண்டமான கோயில் மற்றும் பிற கட்டமைப்புகள் உள்ளன, அவற்றை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கட்டுமானப் பணியை விரைவுபடுத்த ஒரு அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டுள்ளது. சீதாமர்ஹியில் உள்ள புனௌரா தாம்-இல் உள்ள பிரமாண்டமான கோயிலின் கட்டுமானத்தை விரைவில் முடிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அற்புதமான கோயிலின் கட்டுமானம் பீகார் மக்களான நம் அனைவருக்கும் பெருமை ” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக பேசுகையில், சீதாமர்ஹியில் விரைவில் ஒரு பிரமாண்டமான சீதா கோயில் கட்டப்படும் என்று உறுதியளித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சர் நிதீஷ் குமாரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தேர்தலுக்கு முன் பொதுமக்களுக்காக திறக்கப்படும்:

பீகார் அரசாங்க வட்டாரங்கள் இது தொடர்பாக கூறுகையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கோயிலின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பின் பெரும்பகுதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் வடிவமைப்பு, பிரதான கோயிலான சீதா குண்டம், நான்கு பக்கங்களிலும் சிமென்ட் படிக்கட்டுகள், தியானத்திற்கான ஒரு பெரிய மண்டபம் மற்றும் ஒரு வருகைப் பகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த கோயிலை இணைக்கும் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.