Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம்.. ஏர் இந்தியா உதவித்தொகை அறிவிப்பு!

Air India Compensation: அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. டாடா சன்ஸ் ஏற்கனவே ₹1 கோடி இழப்பீடு அறிவித்திருந்தது. இதனால், டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்க உள்ளன. விபத்தில் 270 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம்.. ஏர் இந்தியா உதவித்தொகை அறிவிப்பு!

ஏர் இந்தியா உதவித்தொகை அறிவிப்பு

Published: 

14 Jun 2025 19:31 PM

அகமதாபாத், ஜூன் 14: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் வழங்குவதாக ஏர் இந்தியா (Air India) அறிவித்துள்ளது. முன்னதாக, டாடா சன்ஸ் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமமும் (TATA Group) இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.25 கோடி நிதி உதவி வழங்க இருக்கிறது. இந்த நிதி உதவி ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா வருத்தம்:

ஏர் இந்தியா நிறுவனம் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது. அதில், “சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா துணை நிற்கிறது. இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்க எங்கள் குழுக்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “ எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்காலமாக ரூ. 25 லட்சம் வழங்கும். இது டாடா சன்ஸ் ஏற்கனவே அறிவித்த ரூ. 1 கோடி உதவிக்கு கூடுதல் உதவித்தொகையாகும். இந்த விபத்துக்கு பிறகு ஏற்பட்ட இழப்பால் நாங்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

டாடா குழு ரூ. 1 கோடி அறிவிப்பு:

ஏர் இந்தியா உதவித்தொகை அறிவிப்புக்கு முன்னதாக, டாடா சன்ஸ் நிறுவனத்தால் இழப்பீடு அறிவித்தது. அதன்படி, “இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு டாடா குழுமம் ரூ. 1 கோடி உதவித்தொகையாக வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வோம். இதுமட்டுமின்றி, பிஜே மருத்துவ விடுதி கட்டுமானத்தில் நாங்கள் உதவி வழங்குவோம். இந்த கற்பனைக்கு எட்டாத நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.

இதுவரை எத்தனை உயிரிழப்புகள் பதிவு..?

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 230 பேரில் 217 பெரியவர்கள், 11 சிறுவர்கள் மற்றும் 2 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் 169 இந்திய குடிமக்கள், 53 பிரிட்டிஷ், 1 போர்ச்சுக்கல் மற்றும் ஒரு கனடாவை சேர்ந்தவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 241 பேருடன், விமானத்தின் 12 பணியாளர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், இந்த விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். விமானம் மோதிய மருத்துவ விடுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்த 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.