Indore: முதல்வர் கான்வாய் வாகனங்களில் கலப்பட டீசல்.. மாட்டிய ஊழியர்கள்
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் கலப்பட டீசலால் நடுரோட்டில் நின்று விட்டது. பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய பின்னர், 19 வாகனங்கள் ஒரே நேரத்தில் செயலிழந்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையம் சீல் வைக்கப்பட்டது.

கலப்பட பெட்ரோல் விற்பனை
இந்தூர், ஜூன் 27: மத்திய பிரதேசத்தில் முதல்வரின் பேரணியில் பங்கேற்க இருந்த 19 கான்வாய் வாகனங்கள் கலப்பட டீசலால் நடுவழியில் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் சாலை மார்க்கமாக பயணம் செல்லும் போது அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புக்காக அணிவகுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், அம்மாநிலத்தில் வடமேற்கு பகுதியிக் அமைந்துள்ள ரத்லம் என்ற இடத்தில் 2025 ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த பிராந்திய தொழில்திறன் மற்றும் மேம்பாடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார். அவரின் பயண திட்டப்படி இன்று (ஜூன் 27) சாலை மார்க்கமாக செல்லவிருந்த அவரது வாகன பேரணியில் 19 வாகனங்கள் இடம்பெறவிருந்தன.
பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம்
VIDEO | Ratlam, Madhya Pradesh: As many as 19 vehicles of CM Mohan Yadav’s convoy had to be towed after water was reportedly filled instead of diesel in them. The petrol pump was later sealed over fuel contamination.#MPNews #MadhyaPradeshNews
(Full video available on PTI… pic.twitter.com/IQV9aE2Jfc
— Press Trust of India (@PTI_News) June 27, 2025
முதலமைச்சர் மோகன் யாதவின் இந்த நிகழ்ச்சிக்காக இந்தூரில் இருந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தூரில் இருந்து வாகனங்கள் புறப்படும் முன்பு அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்கில் டீசல்நிரப்பியது. ஆனால் பெட்ரோல் நிலையத்தில் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே நெடுஞ்சாலையில் சில வாகனங்கள் வரிசையாக நிற்கத் தொடங்கின. ஒரு சில வாகனங்கள் டீசல் நிரப்பியதும் ஸ்டார்ட் ஆகாமல் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து நன்றாக ஓடிக்கொண்டிருந்த வாகனத்திற்கு என்ன ஆனது என புரியாமல் அதன் ஓட்டுநர்கள் குழம்பினர். அதேசமயம் ஒரே நேரத்தில் 19 வாகனங்களும் பழுதாகி நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாங்கள் வாகனங்களில் நிரப்பிய டீசலை கண்டறிந்த போது அதில் தண்ணீர் கலந்திருப்பது தெரிய வந்தது . இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சீல் வைக்கப்பட்டது
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன ஓட்டுநர்களிடமும், பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் விநியோகிக்கப்படும் எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதை தாங்கள் அறியாமல் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையம் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையில் டீசல் தொட்டிகள் தண்ணீர் புகுந்திருக்கலாம் எனவும், இதனால் மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று பெட்ரோல் நிலைய நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. இதன்பின்னரே சீல் வைக்கப்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் உரிமையாளரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.