தமிழகத்தில் அதிகரித்து வரும் மெட்ராஸ் ஐ பாதிப்பு… மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை!
Madras Eye Spread: தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், நாள் ஒன்றுக்கு 5 பேர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு
தமிழகத்தில் தற்போது பருவ கால மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தை விட அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றானது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரண தொற்றாகும். ஆனால், இதற்கான சிகிச்சைகளை ஆரம்பத்திலேயே மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த கண் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டால், கண்களில் எரிச்சல், கண்களின் வெளிப்பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். கண்களின் இமைகள் ஒட்டிக் கொள்ளும். இவை அனைத்தும் மெட்ராஸ் ஐ பாதிப்புகளின் முக்கிய அறிகுறிகள் ஆகும். பொதுவாகவே, ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டால் அது மற்ற கண்ணுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதே போல, மற்றவர்களுக்கும் மெட்ராஸ் ஐ தொற்று பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது.
மெட்ராஸ் ஐ- ஆல் பாதிக்கப்பட்டவர்கள்
எனவே, மெட்ராஸ் ஐ கண் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு புதிய கான்டாக்ட் லென்ஸ் களை அணிய வேண்டும். இதே போல, மெட்ராஸ் ஐ- ஆல் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு சுமார் 5 பெயர் இந்த கண் தொற்று நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், பலர் குழந்தைகளாக உள்ளனர்.
மேலும் படிக்க: ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..
மெட்ராஸ் ஐ எப்படி பரவுகிறது
மெட்ராஸ் ஐ தொற்று என்பது கண்களின் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஒரு வித வைரஸ் தொற்று ஏற்படும். இது தான் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் தொற்று நோய் ஆகும். இந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. இதே போல, ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கும், கண் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பொருள்கள் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தும் போதும், இந்த தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கண் தொற்று நோய் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உரிய சிகிச்சை
தற்போது, கோடைகாலமும் நெருங்கி வருவதால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கண் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும், கண் தொடர்பான தொற்றுகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரியான நேரத்தில் முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கண் தொற்று நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மெரினா கடைகள் வழக்கில் மாஃபியா பின்னணி? உயர் நீதிமன்றம் சந்தேகம்