Best Time to Eat Mangoes: இரவு நேரங்களில் ஏன் மாம்பழம் சாப்பிடக்கூடாது..? இவ்வளவு பிரச்சனையை தருமா..?
Eating Mangoes At Night: மாம்பழம் கோடைக்காலத்தின் ராஜா. ஆனால், இரவில் மாம்பழம் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனை, இரத்த சர்க்கரை அதிகரிப்பு, எடை அதிகரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தூக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாம்பழம் சாப்பிடுவது சிறந்தது. வாங்கிய மாம்பழத்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு சாப்பிடலாம்.

கோடை காலத்தில் (Summer) கடைகள், மார்க்கெட், தெருவோரங்கள் என அனைத்து இடங்களிலும் முலாம்பழம், மாம்பழம் மற்றும் தர்பூசணி (Water Melon) பருவகால பழங்கள் கிடைக்கும். இந்த பழங்களில் பெரும்பாலான மக்கள் அதிக விரும்பும் பழங்களில் ஒன்று மாம்பழம். மாம்பழம் (Mango) பழங்களில் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அனைவரையும் அடிமையாக்கும். கடைகளில் பல வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றன. மாம்பழங்களை வாங்கியவுடனே விருப்பப்பட்டு நேரம் காலம் இல்லாமல் சாப்பிட்டு விடுகிறார்கள். இது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும். அந்தவகையில், மாம்பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் மற்றும் தவறான நேரம் என்று உள்ளது. அதை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இரவு நேரங்களில் ஏன் மாம்பழம் சாப்பிடக்கூடாது..?
இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவது உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் காலையிலோ அல்லது மாலையிலோ உட்கொள்ளும்போது உடலில் வெப்ப விளைவை ஏற்படுத்தும். எனவே, மாலை 5 மணிக்கு மேல் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரவில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்:
செரிமான பிரச்சனை:
இரவு நேரங்களில் பொதுவாகவே உடலின் செரிமான செயல்முறை மெதுவாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், மாம்பழம் போன்ற கனமான மற்றும் இனிப்பு சுவை நிறைந்த பழத்தை சாப்பிடும்போது, அது ஜீரணிக்க போராடும். இதனால் வாயு, அஜீரணம், வயிற்று வலி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அதிகரிக்கும்:
மாம்பழத்தில் இயற்கை சர்க்கரையான பிரக்டோஸ் மிக அதிகமாகவே உள்ளது. இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவது திடீரென இரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்யும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆபத்தை விளைவிக்கும். தூங்குவதற்கு முன் சர்க்கரை அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவது இன்சுலின் உணர்திறனையும் பாதிக்கும்.
எடை அதிகரிப்பு:
மாம்பழத்தில் அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இரவில் இதை சாப்பிட்ட பிறகு, உடலில் கலோரிகளை கரைக்க போதுமான நேரத்தை கொடுப்பதில்லை. ஏனென்றால், இரவு நேரங்களில் பெரும்பாலும் தூங்குவதை தவிர, வேறு எந்த உடல் செயல்பாடுகளையும் செய்ய மாட்டோம். அத்தகைய சூழ்நிலையில், அது உடலில் கொழுப்பாக படிந்து எடையை அதிகரிக்கும்.
வெப்பநிலையை அதிகரிக்கும்:
மாம்பழத்தில் உள்ள வெப்பவிளைவு, இரவு நேரங்களில் உட்கொள்ளும்போது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். இதை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தூங்குவதில் சிக்கல்:
மாம்பழம் சாப்பிடுவது உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக உடல் முழுமையாக ஓய்வெடுக்க முடியாது. தூங்குவதற்கு முன் மாம்பழம் சாப்பிட்டால், அது தூக்கத்தைத் தொந்தரவு செய்யும். அத்தகைய சூழ்நிலையில், தூக்கத்தின் தரம் மோசமடையக்கூடும்.
மாம்பழம் சாப்பிடும்முன் செய்ய வேண்டிய விஷயங்கள்:
மாம்பழத்தை கடைகளில் வாங்கி வந்த பிறகோ அல்லது குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்த பிறகோ நேரடியாக அப்படியே சாப்பிடக்கூடாது. 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, சாப்பிடுவதற்கு முன் மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன்மூலம் மாம்பழத்தில் உள்ள வெப்ப எதிர்ப்பு பண்புகள் குறையும். இது உடலில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
மாம்பழம் சாப்பிட சரியான நேரம் என்பது காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் ஆரோக்கியத்தில் எந்த பாதகமான விளைவுகளும் ஏற்படாது.