TVK Vijay: திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..
TVK Vijay Campaign: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அப்போது தொண்டர்கள் வெள்ளம் மத்தியில் உரையாற்றிய விஜய், “ அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், திருப்பு முனையாக அமையும். முதலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்ததே ஒரு திருப்புமுனையாகும்” என தெரிவித்துள்ளார்.

திருச்சி, செப்டம்பர் 13,2025: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். காலை 10.30 மணிக்கு பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் வரவேற்பால் அவர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதிக்கு வரவே சுமார் 4 மணி நேரம் தாமதாமாகியது. வழியெங்கும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடியதால் திருச்சி மாநகரமே போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ” ஒரு சில மண்ணை தொட்டால் அனைத்தும் செழிக்கும் என சொல்வார்கள், அப்படிப்பட்ட மண் தான் திருச்சி. இங்கு தொடங்கினால் நிச்சயம் திருப்புமுனை அமையும். அந்த காலத்தில் போருக்கு போகும் முன்னர், குலதெய்வக் கோயிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டு தான் போருக்கு போவார்கள். அதுபோல அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், திருப்பு முனையாக அமையும். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
Also Read: எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!
திருச்சி என்றாலே திருப்புமுனை தான் – விஜய்:
முதலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைத்ததே . ஒரு திருப்புமுனையாகும். நான் சொல்வது 1956-ல் அவர் நடத்திய முதல் மாநில மாநாட்டை. அது திருச்சியில் தான் நடைபெற்றது. அதேபோல், நான் சொல்வது 1974-ம் ஆண்டு திருச்சி. திருச்சி என்றாலே நிறைய வரலாறு உள்ளது. மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற இடமாகவும் திருச்சி திகழ்கிறது” என பேசியுள்ளார்.
அரசியல் மாற்றம் நிகழும்
இதனிடையே சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவருக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக அவர் பரப்புரை மேற்கொள்ள வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வாகனம் நேற்று சென்னை பனையூர் அலுவகத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. விஜய் அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தது தான் தாமதம். தொண்டர்கள் படை வாகனத்தை சூழ்ந்ததால் நகர முடியாமல் திணறியது. திருச்சி விமான நிலையம் வெளியே வரவே சுமார் 45 நிமிடங்கள் ஆனது. காலை 10.30 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு மதியம் 2 மணிக்கு மேல் தான் வருகை தந்தார்.
மேலும் படிக்க: விதிகளை மீறும் தொண்டர்கள்.. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு!
வழியெங்கும் விஜய்யை காண பொதுமக்கள் கூடினர். மேலும் ஒவ்வொரு இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதால் திருச்சி மாநகரமே குலுங்கியது என சொல்லலாம். விஜய்யின் அரசியல் பயணம் பிற அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. நிச்சயம் அவரால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் தமிழ்நாட்டில் உண்டாகும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.