கரூர் வழக்கு.. டெல்லி புறப்பட்ட விஜய்.. சிபிஐ விசாரணைக்கு மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை?
Tvk Leader Vijay: கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை விமான நிலைத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகிரார்.

சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகம் சம்மன் அனுப்பி இருந்தது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கூறி இருந்த நிலையில், கட்சியில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றதால் 15 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். அதனை ஏற்க மறுத்த சிபிஐ அதிகாரிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 15- ஆம் தேதி) ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்க்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வீட்டிலிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து, தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, நாளை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக உள்ளார்.
3- ஆவது முறையாக சிபிஐ முன் ஆஜராகும் விஜய்
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 2 முறை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி இருந்தார். அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு முக்கியமான மற்றும் நுணுக்கமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இதற்கு விஜய் பதில் அளித்து பேசி இருந்தார். இதில், சில முரண்பாடுகள் இருந்ததாக சிபிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் காரணமாக தற்போது 3-ஆவது முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
விஜய்க்கு முக்கிய புள்ளிகள் வாயிலாக தூது
இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை கொண்டு வருவதற்காக பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் விஜய்யின் நெருங்கிய நண்பர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் மூலமாக விஜய்க்கு பாஜக தலைமை தூது அனுப்பி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.
#WATCH | Chennai, Tamil Nadu: TVK president and actor Vijay leaves from his residence for the airport.
He will appear before the Central Bureau of Investigation (CBI) in New Delhi on March 15 in connection with the Karur stampede case. pic.twitter.com/YHaj90XQvD
— ANI (@ANI) March 14, 2026
ஒரு புறம் சிபிஐ விசாரணை- மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை
இதற்காக தவெக தலைவர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும் 60 சட்டமன்ற தொகுதிகள் வழங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, டெல்லி செல்லும் விஜய் பாஜகவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், தவெக தலைவர் விஜய்யின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “குடும்ப ஆட்சிக்கு முடிவு வரும்” – தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என பாஜக நம்பிக்கை