தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்.. 5,900 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Tamilnadu Assembly Election: தமிழகத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள்ளாக 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் எத்தனை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு புறம் நடக்கும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதையும் படிக்க: பச்சை பொய் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
தேர்தலுக்கு ரூ.1,302 கோடி ஒதுக்கீடு:
தமிழகத்தில் இப்போது வரை 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தேர்தல் கமிஷன் வசம் கொண்டு வரப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்காக தமிழக அரசு ரூ.1,302 கோடி ஒதுக்கியுள்ளது. இது, கடந்த தேர்தல்களை விட அதிகமாகும். 2021-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.795 கோடி செலவிடப்பட்டது. 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ரூ.1,009 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்:
தமிழகத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள்ளாக 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் முழுமையாக சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். அங்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் எத்தனை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு:
இதற்கிடையே வாக்காளர் இறுதிப்பட்டியலையும் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) நடத்துவதற்கு முன்பாக தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணி முடிந்த பின் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 4.23 லட்சம் தகுதிபெறாதவர்கள் நீக்கப்பட்டனர்.
இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கடந்த 6-ந்தேதி வாக்காளர் துணை பட்டியல் தயார் செய்யப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலுடன் துணை பட்டியலை இணைத்து புதிய வாக்காளர் பட்டியலை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5.73 கோடி ஆகும். இதில், 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
இதையும் படிக்க: ஸ்டார் தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதி… விஜய், திலகபாமா வேட்பு மனு ஏற்பு..
விஜய் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு:
தவெக தலைவர் விஜய்யின் புகாருக்கு பிறகு, அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு சமமாக அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுதொடர்பாக போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டது. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்தது குறித்த புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை. விஜய், தேர்தல் விதிகளை மீறி கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து விளக்கம் வந்துள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.