தமிழகத்தின் புதிய ‘ஜனநாயகன்’… சான்றிதழ் பெறத் தயாராகும் விஜய்!
Tamilnadu Assembly Election Result : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தான் வெற்றி பெற்ற தொகுதியில் தேர்தல் அலுவலரிடம் வெற்றி சான்றிதழை பெறுவதற்காக செல்ல உள்ளார்.

வெற்றி சான்றிதழ் பெற செல்லும் விஜய்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இதில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 107 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதே போல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 34,482 வாக்குகளும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 35,458 வாக்குகளும் விஜய் பெற்றுள்ளார்.
107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தவெக
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் 107 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்டு இறுதி முடிவில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் லயோலா கல்லூரிக்கு விஜய் செல்கிறார்.
வெற்றி சான்றிதழ் பெற செல்லும் தவெக தலைவர் விஜய்
அங்கு. தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு அடையாறில் வசித்து வரும் தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற உள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்க உள்ள நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக தனது கட்சியின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கிய சாமியுடன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆட்சி அமைப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை
இதில், தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் தனியாக ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வேறு எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனும் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.