வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையம்- செல்போன்கள் வைப்பு அறை… இன்னும் புதிய வசதிகள்… தேர்தல் ஆணையம் அதிரடி!
Polling Booth New Facilities: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. இதில், வாக்காளர்களுக்கான உதவி மையம் மற்றும் வாக்காளர்களின் செல்போன்கள் ஆகியவை வைப்பதற்கான தனி அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

கோப்புப்படம்
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடி மையங்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்காக பல்வேறு வசதிகளை தேர்தல் ஆணையம் கொண்டு வர உள்ளது. இதில், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்காக காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், வாக்குச்சாவடிகளில் முறையான வழிகாட்டி பதாகைகள், போதிய வெளிச்சம் உள்ள வாக்குச்சாவடி அறைகள், இதேபோல, வாக்கு சாவடிகளில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போஸ்டர்கள் ஒட்டப்பட உள்ளன. அதில், வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளர்கள் பட்டியல், வாக்காளர்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள்.
வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கும் பணி
மேலும், வாக்குப்பதிவு நடைமுறை, வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்களை அறிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த உதவி மையங்கள் குறித்த வழிகாட்டி பதாகைகள் இடம் பெறும். மேலும், வாக்களிக்க வரும் பொது மக்களின் வசதிக்காக அவர்களின் செல்போன்கள் தனியாக வைப்பதற்கு அறை அமைக்கப்பட உள்ளது. இந்த செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு அந்த அறையில் தன்னார்வலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் படிக்க: பரிசுப் பொருட்கள் விநியோகம்? ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படை சோதனை – மதுரையில் பரபரப்பு
வாக்காளர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள்
இதற்காக, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது, வாக்களிக்க வரும் வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வாக்காளர்களின் செல்போன்கள் வைப்பதற்கான அறை மற்றும் அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யும் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி, வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாக்குப்பதிவு தொடங்கி முடிவடையும் வரை அனைத்தையும் கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: NDA கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு.. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?.. ஆலோசிக்க சென்னை வருகிறார் பியூஸ்கோயல்..