நெல்லையில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு… வெறிச்சோடிய வாக்குச்சாவடி. என்ன காரணம்!
Perumpathu Village Boycott Election: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் பெரும்பத்து என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தற்போது வரை அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூட தங்களது வாக்கை பதிவு செய்யவில்லை. அந்த கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் பெரும்பத்து கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு
தமிழகத்தில் காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, 11 மணி நிலவரப்படி சுமார் 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் சுமார் 1,680 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், நாங்குநேரி பகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் 290- ஆவது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், தற்போது 5 மணி நேரத்தை கடந்தும் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணித்த பெரும்பத்து கிராம மக்கள்
இந்த கிராமத்தில் 969 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேர்தலை புறக்கணித்து வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமே வாக்குச்சாவடி பகுதியில் உள்ளனர். பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2- ஆம் தேதி பட்டியலினத்தவர் உள்பட இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 7 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிலவியது.
கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை
எனவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். அதன்படி, வருவாய்த் துறையினர் கிராம மக்களிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக கிராம மக்களிடம் நேரடியாக சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதன் பிறகே நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று கிராம மக்கள் தெரிவித்திருந்தனர். இதனிடையே அருகில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் மற்றும் வாக்களிப்பதற்காக வந்திருந்தார். அவரை வாக்களிக்க கூடாது என்று கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
வாக்கு செலுத்திய பெண்ணை அடிக்க முயன்ற மக்கள்
இந்த வாக்குச்சாவடி பதற்றமான வாக்குச்சாவடி என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண் வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த பெண் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர், அந்த பெண் வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த போது கிராம மக்கள் அவரை தாக்க முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் வாகனம் மூலம் வெளியில் அழைத்துச் சென்றனர். இதனால், அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.