கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!
IT Raid In Senthil Balaji Friend Places: கரூரில் திமுக எம். எல். ஏ செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த என்பவருக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

செந்தில்பாலாஜி நண்பர் இடங்களில் சோதனை
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கரூர் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏவாக இருந்து வரும் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக திமுகவினர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 5 நாட்களுக்கு முன்பு கரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் உள்ள தியாகராஜன் என்பவருக்கு பங்குதாரராக இருந்து வரும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் தீவிர சோதனையை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, வி. ஆர். ஜி. கிரானைட் என்ற நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
செந்தில்பாலாஜி நண்பர் தொடர்புடை இடங்களில் சோதனை
இந்த நிலையில், இன்று காலை சுமார் 11 மணி அளவில் கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் என்பவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, செந்தில் பாலாஜியின் மற்றொரு 2 நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், கொங்கு மெஸ், சக்தி மெஸ் ஆகிய அலுவலகங்களில் சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு அதிக அளவு பண பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
மேலும் படிக்க: ஜனநாயகத் திருவிழா 2026: வசதிகள் நிறைந்த வாக்குச்சாவடிகளுடன் தமிழகம் தயார்!
கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா
அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜியின் நண்பர்கள், தொழில் ரீதியான நண்பர்கள் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் மேற்கண்ட இடங்களில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது தொடர்பான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபுவின் மகன்களான ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சென்னை மயிலாப்பூரில் நடத்தி வரும் எஸ் குரோத் அலையன்ஸ் எல். எல். பி. என்ற நிறுவனத்தில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
துறைமுகம் தொகுதியில் பணம் விநியோகம்
இதில், துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பி.கே.சேகர்பாபு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர்களுக்கு ரூ.10,000 போலி செக்.. வீடு வீடாக விநியோகம்.. நிலக்கோட்டையில் பரபரப்பு!