மார்ச் 4, 2026: புதுச்சேரியில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சிக்கு ‘முரசு’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது இரு கட்சிகளுக்கும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த மாதம் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட முனைப்புக் காட்டி வருகின்றன. கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின்னர் தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு ‘முரசு’ சின்னம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..
தேமுதிகவிற்கு முரசு சின்னம்:
தற்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்திருந்தாலும், தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை மீண்டும் கோரினால், குறிப்பிட்ட தேர்தலுக்காக அந்தச் சின்னத்தை தற்காலிகமாக ஒதுக்க அதிகாரம் உள்ளது. அதன்படி, 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ‘முரசு’ சின்னத்தை பொதுச் சின்னமாக வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது தேமுதிக தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்:
அதே சமயம், கட்சி தொடங்கியதிலிருந்து நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் அந்தக் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அக்கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் இந்தச் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு சாதகமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மெரினா கடைகள் வழக்கில் மாஃபியா பின்னணி? உயர் நீதிமன்றம் சந்தேகம்
ஏற்கனவே தமிழகத்தில் சுமார் 8% வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, இந்த முறை தனது வாக்கு வங்கியை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காகவும் நாம் தமிழர் கட்சி தரப்பில் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள்:
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மக்கள் நீதி மையத்திற்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேமுதிகவிற்கு ‘முரசு’ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்தச் சின்னங்கள் தற்போது தற்காலிக அனுமதி மட்டுமே. எதிர்காலத்தில் இதனை நிரந்தரமாகத் தக்கவைக்க, குறிப்பிட்ட அளவு வாக்குச் சதவீதத்தை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
