மே 4, 2026: இந்தியாவில் கடந்த மாதம் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 29ஆம் தேதி மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மே 4ஆம் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக்கழகம் சுமார் 108 இடங்களில் முன்னிலை வகித்து, தனிப்பெரும்பான்மையுடன் உருவெடுத்துள்ளது. மேலும், முதல் தேர்தலிலேயே சுமார் 34.90% வாக்குகளைப் பெற்று, இதுவரை எந்த அரசியல் கட்சியும் சாதிக்காத ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது.
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் 89 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்றன. எல்.டி.எப் 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், பிற கட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
3 மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக:
மற்ற மூன்று மாநிலங்கள் — புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் — இவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
புதுச்சேரியைப் பொருத்தவரையில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ், மூன்றாவது இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. பிற கட்சிகள் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில் பாஜக 215 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் 81 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.