நாளை சட்டமன்ற தேர்தல்.. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!
Tamilnadu Assembly Election: திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு முடியும் வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது வாக்காளர்களை வேட்பாளர்கள் வாகனங்களில் அழைத்து வரவோ அனுமதி இல்லை.

தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் நாளை (ஏப்.23) 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு வசதியாக, நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. கூட்டணியை உறுதி செய்வது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தலைவர்கள் பரப்புரை என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. குறிப்பாக, இந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி காரணமாக எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி பிரிவின் கீழ், தேர்தல் நாளன்று அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பது சட்டப்பூர்வமான விதியாகும். நாளை நடைபெறும் தேர்தலுக்காக இந்த விடுமுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
விதிமீறல் மற்றும் புகார் அளித்தல்:
விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் அல்லது ஊழியர்களை வேலைக்கு வர வற்புறுத்தும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். இது தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய மாநில அளவில் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டால் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
பிற முக்கிய அறிவிப்புகள்:
வாக்குப்பதிவுக்கான அமைதியான சூழலை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பிரச்சாரத்திற்காக வந்த வெளிமாவட்டச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் நேற்று மாலையுடன் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.
கட்டுப்பாடுகள் அமல்:
திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு முடியும் வரை பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது வாக்காளர்களை வேட்பாளர்கள் வாகனங்களில் அழைத்து வரவோ அனுமதி இல்லை.
இதையும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
தமிழகம் முழுவதும் 4,023 வேட்பாளர்கள் களம் காணும் இந்தத் தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும், அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கவும் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.