Assembly Election 2026 Results: பலத்த பாதுகாப்புடன் 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. மக்களின் தீர்ப்பு என்ன?
Assembly Election Result 2026: கேரளாவில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட பெரும்பான்மை கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியினர் உள்ளனர்.

மாதிரிப் புகைப்படம்
மேற்கு வங்காளம், அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தத்தில், மேற்கு வங்காளத்தில் 92.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது, அம்மாநிலத்தில் எப்போதும் இல்லாத அதிகமான வாக்கு சதவீதமாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய கோர்கா ஜனமுக்தி மோட்சா 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி ஆகியவை 294 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
இதையும் படிக்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் பாஜக?
மேற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பான்கா தொகுதியில் ஏராளமான முறை கேடுகள் நடந்ததால், அத்தொகுதியில் நடந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. எனவே, மீதியுள்ள 293 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 77 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றி, சரித்திரம் படைக்க துடிக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள், பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளன.
முடிவுகள்
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி?
அசாம் மாநிலத்திலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 40 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 126 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது.
கேரளாவில் வெல்லப்போவது யார்?
சட்டசபை தேர்தலையொட்டி கேரளா மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) தலைமையில் ஒரு கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஒரு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மற்றொரு கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.
883 வேட்பாளர்கள் போட்டி:
மொத்தம் 883 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் மொத்தம் 79.03 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட 3 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவானது. கேரளம் மாநிலத்தைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 43 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. கேரளாவில் தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட பெரும்பான்மை கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியினர் உள்ளனர். இரட்டை இலக்க தொகுதிகளை கைப்பற்றும் நம்பிக்கையில் பாஜகவும் உள்ளது.
இதையும் படிக்க: டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழப்பு.. ஏசி வெடித்ததே காரணம்?
புதுச்சேரியில் வெல்லப்போவது யார்?
புதுவை மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 9-ந்தேதி நடந்தது. மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 9 லட்சத்து 50 ஆயிரத்து 639 வாக்காளர்களில், 8 லட்சத்து 67 ஆயிரத்து 269 பேர் வாக்களித்து இருந்தனர். அதாவது 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 6 மையங்களிலும் தொடங்குகிறது. புதுவையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அணியாகவும் களத்தில் உள்ளனர். இதேபோல் தவெக, நேயம் மக்கள் கழக கட்சியுடன் இணைந்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. எனவே புதுச்சேரியில் 4 முனை கடும் போட்டி நிலவுகிறது.