இனி அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றலாம் – ஆர்பிஐயின் புதிய திட்டம்
RBI Plans Bank Account Portability: வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றும் திட்டத்தை அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மாதத் தவணை, சம்பளம் போன்ற அனைத்து சேவைகளும் தடையின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
வங்கி சேவைகளை பயன்படுத்தும் இந்திய மக்களுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் படி இனி வங்கியின் கணக்கு எண்ணை மாற்றாமலேயே, வங்கியை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த புதிய திட்டம் பேமெண்ட் ஸ்விட்சிங் சர்வீஸ் (Payments Switching Serivices) என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றும் திட்டம்
தற்போது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறும்பொழுது வங்கிக் கணக்கு எண்ணும் மாறும். இதனால் நமது சம்பவளம், மாதத் தவணை, எஸ்ஐபி போன்ற அனைத்து பரிவர்த்தனைகளையும் தனித்தனியாக மாற்ற வேண்டிய பிரச்னை இருந்து வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்த சிக்கல் காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கியை மாற்றாமல் பழைய வங்கிகளிலேயே தொடரும் நிலை இருந்தது.
இதையும் படிக்க : நீங்கள் இளம் வயதில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்!
ஆனால் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் வங்கியை மாற்றினாலும் நம் கணக்கு எண் மாறாது.. அதே போல அந்த கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து மாதத் தவணை, மாத சம்பளம் போன்ற அனைத்தும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்டும். இதனால் மக்கள் சிரமமின்றி தங்கள் வங்கி கணக்குகளை மாற்றிக்கொள்ளலாம். இதனால் வேலைகள் குறையும்.
மேலும் பயனர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து வரவு செலவு விவரங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதியும் கிடைக்கும். இதன் மூலம் நிதி மேலாண்மை எளிதாகும். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும். மேலும் வங்கிகளுக்கு இடையிலான போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகள் மற்றும் சலுகைகள் போன்ற பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!
தற்போது இந்த திட்டம் ஆய்வு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வர இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவணங்களின் ஒத்துழைப்பு அவசியம். அதனை பெற இந்திய ரிசர்வ் வங்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மொத்தத்தில் இந்த கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றும் நடைமுறைக்கு வந்தால், மொபைல் எண்ணை மாற்றாமல், நெட்வொர்க்கை மட்டும் மாற்றும் மொபைல் எண் போர்டபிலிட்டி சேவை போலவே வங்கி சேவையிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.