இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்.. நஷ்டம் உங்களுக்கு தான்!
Avoid Interest Loss on Provident Fund | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு இபிஎஃப்ஓ அமைப்பு வட்டி வழங்கும். இந்த வட்டியை பெற சிலவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் பிஎஃப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி நிறுத்தப்படும்.

இந்தியாவில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும், ஊழியர் வருங்கால பைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு தொடங்கி அதில் ஊழியர்களின் மாத வருமானத்திலிருந்து குறிப்பிடத் தொகையை பிடித்தம் செய்து இந்த கணக்கில் வரவு வைக்கும். அவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் வட்டியும் வழங்குகிறது. இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணி காலம் முழுவதும் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கவில்லை என்றால் அதற்கான வட்டியும் வழங்கப்படும்.
அதன்படி, பிஎஃப் கணக்கில் மாதம் மாதம் வர வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து நல்ல தொகையை பெற முடியும். ஆனால், இந்த ஒரு சிறிய தவறை செய்வதன் மூலம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டி நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அது என்ன தவறு, பிஎஃப் கணக்கில் தொடர்ந்து வட்டி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கில் இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பாலான இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் அவ்வப்போது அலுவலகத்தை மாற்றிக்கொண்டே இருப்பர். அவ்வாறு ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலத்திற்கு செல்லும் உறுப்பினர்கள் தங்களது பழைய பிஎஃப் கணக்கை புதிய பிஎஃப் கணக்குடன் இணைக்காமல் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டி நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை பொறுத்து அதற்கான வட்டி தொகையையும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். இந்த நிலையில், ஊழியர்கள் தாங்கள் ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாறும்போது பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் வட்டி வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
பிஎஃப் கணக்கை மாற்றவில்லை என்றால் என்ன ஆகும்?
அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளின் படி, ஊழியர்கள் ஒரு பணி இடத்தில் இருந்து மற்றொரு பணி இடத்திற்கு மாறும்போது 36 மாதங்களுக்கு உள்ளான பிஎஃப் கணக்கை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் 36 மாதங்கள் கழித்து பழைய கணக்கிற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி தொகையை இபிஎஃப்ஓ நிறுத்திவிடும். எனவே, ஊழியர்கள் பணி இடத்தை மாற்றும்போது பிஎஃப் கணக்கை மாற்ற வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.