AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா இஸ்ரேல் உறவில் அடுத்த கட்டம்.. 2 நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி..

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான மற்றும் நீண்டநாள் மூலோபாய கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும். மேலும், பொதுவான சவால்களை ஆய்வு செய்து, உறுதியான ஜனநாயக நாடுகளாக இருக்கும் இரு நாடுகளின் வலுவான கூட்டாண்மைக்கான ஒருங்கிணைந்த நோக்கை முன்னேற்றும் வாய்ப்பாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இஸ்ரேல் உறவில் அடுத்த கட்டம்.. 2 நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Feb 2026 09:44 AM IST

பிப்ரவரி 25, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்தியா–இஸ்ரேல் உறவுகள் “சிறப்பு மூலோபாய கூட்டாண்மை” (Special Strategic Partnership) என்ற உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஜெருசலேமுக்கு உள்ள உறவுகளை ஒத்த முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

2 நாள் பயணமாக இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி:

பிரதமர் மோடி இன்று முதல் இரண்டு நாள் பயணமாக இஸ்ரேலுக்கு செல்கிறார். இந்த பயணம் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இது பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். 2017 ஜூலை மாதம் நடைபெற்ற முதல் பயணத்தின் போது இந்தியா–இஸ்ரேல் உறவு “மூலோபாய கூட்டாண்மை” நிலைக்கு உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க: ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!!

இப்போது அறிவிக்கப்பட உள்ள “சிறப்பு மூலோபாய கூட்டாண்மை” ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் புதிய கட்டத்தை உருவாக்கும். இதன் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை இணைந்து உருவாக்குதல் மற்றும் அவசர சூழல்களில் ஒருவருக்கொருவர் துணைநிற்கும் புரிதல் உருவாகும் என கூறப்படுகிறது.

“இரு நாடுகளும் பல ஆண்டுகளாக நம்பகமான கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. நெருக்கடியான நேரங்களிலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகிறது,” என வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி:

பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர். அதன்பின் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பு நடத்தவுள்ளனர். பின்னர், பிரதமர் மோடி ஜெருசலேம் நகரத்திற்குச் செல்வார். அங்கு இந்திய வம்சாவளியினரை சந்திப்பதுடன், இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெத்தில் உரையாற்ற உள்ளார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அரிய மரியாதையாகும்.

மேலும் படிக்க: இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!

பயணத்திட்டம் என்ன?

இன்று மாலை, இஸ்ரேலின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார். இதில் முன்னணி இஸ்ரேல் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதே இரவு, நெதன்யாகு பிரதமர் மோடிக்காக தனியார் விருந்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

நாளை காலை, ஹாலோகாஸ்ட் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த யாத் வாஷேம் நினைவிடத்திற்குச் செல்வார். பின்னர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோகை சந்திக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது.

“இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரகசிய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் இதுவரை கிடைக்காத பல புதிய பிரிவுகள் திறக்கப்படும்,” என வட்டாரங்கள் தெரிவித்தன.

கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

உள்ளூர் ஊடகங்கள் தெரிவிப்பதாவது, வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புரிதல்கள் உருவாகி வருகின்றன. மேலும், லேசர் அடிப்படையிலான வான்வழி பாதுகாப்பு அமைப்பு (Or Eitan) திட்டத்தில் இந்தியாவை இணைக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்ற முன்னேற்றத் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்தியா–இஸ்ரேல் உறவுகள்:

புதுதில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான ஆழமான மற்றும் நீண்டநாள் மூலோபாய கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும். மேலும், பொதுவான சவால்களை ஆய்வு செய்து, உறுதியான ஜனநாயக நாடுகளாக இருக்கும் இரு நாடுகளின் வலுவான கூட்டாண்மைக்கான ஒருங்கிணைந்த நோக்கை முன்னேற்றும் வாய்ப்பாக அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா–இஸ்ரேல் உறவுகள் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சைபர் பாதுகாப்பு மற்றும் புதுமை உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்த கூட்டாண்மையின் முக்கிய தூணாக மாறியுள்ளது. இஸ்ரேல், இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கி வருகிறது.