இந்திய ராணுவம் தாக்குதல்.. பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சந்தூர் எனப்படும் அதிரடி தாக்குதலில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் வீட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மே 7 அன்று நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில், அசாரின் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் மசூத் அசார் (Masood Azar) வீட்டில் இருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவத்தின் 2025, மே 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் குண்டு வீசி தகர்த்தெறிந்தனர். மொத்தம் 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இவற்றில் 4 பாகிஸ்தானிலும், 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சந்தூர் (Operation Sandoor) என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தியா அதிரடி தாக்குதல்
ஏற்கனவே நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நள்ளிரவில் இந்த தாக்குதலை நடத்தியது. இப்படியான நிலையில் இந்திய எல்லையிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பஹாபல்பூரில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் மசூத் அசாரின் வீடு உள்ளது. இங்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அசாரின் குடும்பத்தினர் 10 பேர், 4 பணியாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.
நள்ளிரவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மசூத் அசாரின் மறைவிடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். ஆனால் தாக்குதல் நடத்த நேரத்தில் மசூத் அசார் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மசூத் அசாரின் மூத்த சகோதரி மௌலானா கஷாப்பின் குடும்பமும், மூத்த மகள் ஷாஹீத் பாஜி சாதியா குடும்பத்தினரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் குழந்தைகளாவர். இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்ததை மசூத் அசார் உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசூத் அசார் யார் தெரியுமா?
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனர் தான் மசூத் அசார். இந்த குழுவானது கடந்த 2002 ஆம் ஆண்டு உலகளவில் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பயிற்சி முகாம்களை இந்த பயங்கரவாத குழு பலத்த பாதுகாப்பின் கீழ் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மசூத் அசார் பஹவல்பூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்.
1968 ஆம் ஆண்டு பஹாவல்பூரில் பிறந்த அவர் ஆப்கானிஸ்தானில் தீவிரமாக செயல்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்ற தீவிரவாத குழுவில் உறுப்பினராக இருந்தார். இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் 2000 ஆம் ஆண்டு பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டில் கராச்சியில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பை உருவாக்கினார்.
இவரது தலைமையிலான குழு தான் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது. 2019 ஆம் ஆண்டு மசூத் அசாரை ஐ.நா.சபை அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. உடல்நல பிரச்னைகள் காரணமாக பெரும்பாலும் பொதுவெளியில் மசூத் அசாரை காண முடியாது. காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.