ஏஐ வீடியோக்களுக்கு லேபிள் கட்டாயம்.. ஸ்டிரிக்டாக சொன்ன மத்திய அரசு!
AI Video In Social Medias Should Contain Label | சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு வீடியோக்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஏஐ வீடியோக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சமூக ஊடகங்களிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களை திறந்தாலே செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தான் அதிக அளவு உள்ளன. பெரும்பாலான பயனர்களால் அவை உண்மையான வீடியோக்களா அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டவையா என்பதை கூட கண்டுபிடிக்க முடிவதில்லை. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இந்திய அரசு ஏஐ மீதான விதிகளை கடுமையாக்கியுள்ளது.
டீப் ஃபேக் வீடியோக்களுக்கு லேபில் கட்டாயம்
இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வளர்ச்சியால் டீப் ஃபேக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, போலி வீடியோக்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் இந்த டீப் ஃபேக் அம்சத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் உட்பட அனைவரும் மிக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!
இவையெல்லா கட்டாயம் – ஸ்டிரிக்டாக சொன்ன அரசு
- அதாவது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்கள் மீது அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்த்தும் விதமான லேபில் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- சர்ச்சைக்குரிய மற்றும் ஒருவருக்கு தீங்கு இழைக்கும் வகையில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு உள்ளாக நீக்கம் செய்யப்பட வேண்டும்.
- பயனர்கள் வீடியோவை பதிவு செய்யும்போதே அவர்களிடம் அந்த வீடியோ முழுவதும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சத்தை கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : சிக்னல் கோளாறு இல்லாமல் போன் பேசலாம்.. இந்த ஒரு ஆப்ஷனை ஆன் செய்தால் போதும்!
மேற்குறிப்பிட்ட இந்த விதிகள் பிப்ரவரி 20, 2026 முதல் அமலுக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.