“பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்”.. தமிழருவி மணியன் அழைப்பு!!
ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது மாநிலமே குலுங்கியது. ஆனால், பின்னர் பரிதாபமான சூழ்நிலையைத் தான் சிரஞ்சீவி சந்தித்தார். அதேநேரத்தில், பவன் கல்யாண் சரியாக காயை நகர்த்தி, துணை முதல்வரானார். சிரஞ்சீவியாக இருப்பதா இல்லை பவன் கல்யாணாக இருப்பதா? என்ற வாய்ப்பு மட்டுமே விஜய்யிடம் உள்ளது.

ஜி.கே.வாசன், தமிழருவி மணியன்
ஈரோடு, டிசம்பர் 21: திமுகவை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என தமாகாவில் இணைந்த தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் தனியாக நின்றால் பலனில்லை, அவரை ஒரு மகனாக நினைத்து இதை சொல்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில், தமிழிருவி மிணியனின் காமராஜர் மக்கள் கட்சி நேற்றைய தினம் சங்கமித்தது. ஈரோட்டில் நடந்த விழாவில் முக்கிய நிர்வாகிகளுடன் காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழிருவி மணியன் இணைத்தார். தொடர்ந்து, பேசிய தமிழருவி மணியன் அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் பேசினார். ரஜினி கட்சி தொடங்க முடிவெடுத்தபோது, அவருடன் பயணித்தது. தொடர்ந்து, விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது என பல்வேறு அரசியல் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த அரசியல் இணைப்பு நிகழ்வில் அவர் பேசியவை குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
காங்கிரஸ் கட்சி அல்ல, லிமிடெட் கம்பெனி:
ஈரோட்டில் நடந்த இந்த அரசியல் இணைப்பு குறித்து பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேசிய தமிழருவி மணியன், காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல.
அதுஒரு லிமிடெட் கம்பெனி. இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும். மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும் என்றார்.
ரஜினி கட்சி தொடங்காததற்கு நான் காரணமா?
மக்கள் நலக் கூட்டணியை நான் உருவாக்கவில்லை. அதில் காந்திய மக்கள் இயக்கம் இடம் பெறவில்லை. விஜயகாந்தை முதல்வராக முயற்சித்தேன் என்பதும் தவறான தகவல். மாற்று அரசியலை உருவாக்குவோம் என்று ரஜினி சொன்னதால்தான் அவருடன் இணைந்து செயல்பட்டேன். ரஜினி கட்சி தொடங்காததற்கு தமிழிருவி மணியன் காரணம் என்கின்றனர். நான் அவரிடம் ரூ.200 கோடி வாங்கிவிட்டேன் என்றனர்.
கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இவ்வளவு பணம் வாங்கிவிட்டாரே கட்சி தொடங்கினால் இன்னும் எவ்வளவு பணம் இவருக்கு கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சத்தில் அவர் கட்சியை தொடங்கவில்லை என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், உண்மையில் நான் பணம் வாங்கவில்லை. அவரை சந்திப்போது மிளகு ரசம் மட்டுமே அருந்தினேன். நான் ரஜினியிடம் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே என்றார்.
விஜய்க்கு 20% வாக்கு வங்கி:
தமிழகத்தில் விஜய்க்கு 20 சதவீத வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது.
இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார்.
மேலும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
விஜய்க்கு முக்கிய அறிவுரை:
தேர்தலில் சிரஞ்சீவியாக இருப்பதா இல்லை பவன் கல்யாணாக இருப்பதா? என்ற இரு வாய்ப்பு மட்டுமே விஜய்யிடம் உள்ளது. 1967ல் அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி அமைத்தது சாத்தியம் என்றால், அதிமுக, பாஜக, விஜய் ஒரே அணியில் நிற்பதும் சாத்தியமே. எதிர்வரும் பேரவைத் தேர்தலில் அரசியல் எதிரியை வீழ்த்ததான் விஜய் பாடுபட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கொள்கை எதிரியை பார்த்துக் கொள்ளலாம் என்றார்.