மே 9, 2026: தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவது குறித்து இன்று காலை அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த சூழலில், வன்னியரசு, “எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்” என குறிப்பிட்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில், இந்த பதிவு சூசகமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், தற்போது வரை ஆட்சி அமைக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது. ஆளுநரை மூன்று முறை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்தித்திருந்தாலும், தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை.
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா?
ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத்துடன் தற்போது வரை 116 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றவுடன், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தன. குறிப்பாக, “திமுக கூட்டணியில்தான் இருப்போம்; ஆனால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருமா சொல்லப்போகும் முடிவு என்ன?
இந்த சூழலில், மீதமுள்ள இரண்டு இடங்கள் தேவைப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆவல் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..
இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
இதற்கு முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான Vanniarasu நேற்று முதல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நேற்றைய தினம் தனது முகநூல் பக்கத்தில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இது திருமாவின் காலம், இனி உயர்வும் மேலும் மேலும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாங்களே மைய்யம் – வன்னியரசு:
இந்த சூழலில், மீண்டும் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “எம்மை ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும், நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். இது, தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது வரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.