LGBTQ+ குறித்து சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்ட திருமாவளவன்.. என்ன விஷயம்?
Thirumavalavan Controversial Remark On LGBTQ Community : பாலினச் சிறுபான்மை பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, திருமாளவளவன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எல்ஜிபிடிகியூ சமூகம் குறித்து பேசியதற்கு பெரிதும் வருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 07 : எல்ஜிபிடிகியூ சமூகம் (LGBTQ Community) குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் (Thol Thirumavalavan) பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தற்போது திருமாவளவன் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது, கோவை மாவட்டம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் பாராளுமன்றம் நிகழ்ச்சி ஒன்றில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, பாலினச் சிறுபான்மை பிரிவினர் குறித்து திருமாவளவன் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. அதாவது, இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது என்றும் அது வக்கிரமானது எனவும் திருமாவளவன் கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் கண்டனத்தை எழுப்பியது. அதோடு, பாலினச் சிறுபான்மை பிரிவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், திருமாவளவன் பாலினச் சிறுபான்மை பிரிவினர் குறித்து பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
LGBTQ+ குறித்து சர்ச்சை கருத்து
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி நான் பேசியது அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. . எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.
எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
மன்னிப்பு கேட்ட திருமாவளவன்
பெரிதும் வருந்துகிறேன்!
LGBTQ+ தோழர்களுக்கு ஒரு விளக்கம்!
————————————–
கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை – வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த “மாணவர் பாராளுமன்றம்” என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அதில் ஒரு மாணவர்…— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 6, 2025
எல்ஜிபிடிகியூ சமூகம்
அண்மையில் கூட, சென்னையில் பாலினச் சிறுபான்மை பிரிவினரின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு சமூகத்தினர் வண்ணங்கள் நிறைந்த ஆடைகளை அணிந்து கொண்டு பதாகைகளை ஏந்தி சுயமரியாதை பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்த பேரணியில் பாலின சுதந்திரத்தை வலியுறுத்தியும், தங்களை சமூகத்தில் ஒன்றாக நடத்த கோரியும், தங்களின் திருமணங்களையும் அங்கீகரிக்க கோரியும் வலியுறுத்தினர். இப்படியான சூழலில், பாலினச் சிறுபான்மை பிரிவினர் குறித்து திருமாவளவன் பேசிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.