அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம் – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: குமரி கடலில் நிலவக்கூடிய கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஜனவரி 23ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 19, 2026: வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குமரி கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், அதே சமயத்தில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை:
வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை காலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட கடலோர தமிழக பகுதிகளில் நல்ல மழை பதிவாகியது. சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு சதவீதம் கூடுதல் மழை பதிவானது. வங்கக்கடலில் உருவான புயல்களின் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்தது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்:
குமரி கடலில் நிலவக்கூடிய கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, ஜனவரி 23ஆம் தேதி வாக்கில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 24ஆம் தேதியும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை எதிரொலி : சென்னை கடற்கரைகளில் 233 மெட்ரிக் கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்த 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் பதிவான வெப்பநிலை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 32.5 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 31.5 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 30 டிகிரி செல்சியஸ், பாம்பனில் 30.1 டிகிரி செல்சியஸ், நாமக்கலில் 30.9 டிகிரி செல்சியஸ், கோவையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.0 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 30.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் இந்த வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.