“200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!
பிரதமர் மோடி மற்ற மாநிலங்களில் தமிழகத்திற்கு எதிராகப் பேசுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "பிரதமர் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிப் பேசுகிறார். தமிழகம் வந்தால் பண்பாடு, கலாச்சாரம் எனப் புகழ்கிறார்; பீகார் அல்லது ஒரிசா சென்றால் தமிழர்களைத் திட்டுகிறார்" என்று சாடினார்.

செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மே தின விழாவை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, தொழிலாளர்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் போராடிப் பெற்ற இந்த நாளை ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறோம் என்றார். “காங்கிரஸ் பேரியக்கம் எப்போதும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க துணை நிற்கும்” எனத் தெரிவித்து, போராடிய தோழர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார்.
மேலும் படிக்க: வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
தேர்தல் முடிவுகள் குறித்து
சமீபத்திய கருத்துக்கணிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். “திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருவது” என்றார். தற்போது வெளியாகும் சில முடிவுகளை ‘கருத்துக்கணிப்பு’ என்று சொல்ல முடியாது, அவை ‘கருத்துத் திணிப்பு’ என்று விமர்சித்தார். மக்கள் ஏற்கனவே தீர்ப்பை எழுதிவிட்டார்கள், மே 4-ம் தேதி அந்தத் தீர்ப்பு முறையாக வாசிக்கப்படும் என்று கூறினார். மேலும், தமிழக முதல்வராக அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் அமர்வார், எங்களது கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடி மீதான விமர்சனம்:
பிரதமர் மோடி மற்ற மாநிலங்களில் தமிழகத்திற்கு எதிராகப் பேசுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “பிரதமர் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிப் பேசுகிறார். தமிழகம் வந்தால் பண்பாடு, கலாச்சாரம் எனப் புகழ்கிறார்; பீகார் அல்லது ஒரிசா சென்றால் தமிழர்களைத் திட்டுகிறார்” என்று சாடினார். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும், பாசிசத்திற்கும் மதவாதத்திற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதால் பாஜக படுதோல்வியைச் சந்திக்கும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
பேரறிவாளன் வழக்கறிஞரான விவகாரம்:
வருமான வரித்துறை சோதனை தொடர்பான கேள்விகளுக்கு, “எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வருகிறார்கள். அதை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்கள் சட்டக்குழுவின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு. இது சட்டப்படி நடந்துள்ளதா என்பதை பார்த்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.