Tamil Nadu Weather Update: தொடரும் கனமழை எச்சரிக்கை.. மீண்டும் வெயில் வருமா..? அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி..?
7-day Weather Forecast Tamil Nadu: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அறிக்கையை கவனமாக கடைபிடிக்கவும்.

சென்னை, மே 27: தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை தவிர, காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை (Weather Update) நிலவியது. அதேபோல் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி (Nilgiris) மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த 7 தினங்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எப்படி..?
ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, 2025 மே 27ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.




2025 மே 28ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள்,தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 29ம் தேதி முதல் மற்றும் 2025 மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளை சுற்றி ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 மே 31ம் தேதி முதல் 2025 ஜூன் 1ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.