தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை புதிய உத்தரவு வெளியீடு
Tamil Nadu Schools Reopen: ஜூன் 2, 2025 அன்று தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கல்வித்துறை, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு, உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றில் கவனம் செலுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜூன் 02: தமிழகத்தில் (Tamilnadu) 2025 ஜூன் 02 இன்று பள்ளிகள் (School Reopen Today) திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னதாகவே வர, ஒழுக்கம் மற்றும் சீருடையை பின்பற்ற மாணவர்களை வழிநடத்த வேண்டும். வாரத்தில் இரண்டு உடற்பயிற்சி நேரம், ஒரு நாளில் கூட்டு உடற்பயிற்சி கட்டாயம். சிறார் இதழ்கள், நாளிதழ்கள், நூல்கள் வாசிக்க 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். மாணவர் அமைப்புகள் பள்ளி நாட்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிவடைந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் மீண்டும் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கிடையே, மாநில பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் முக்கியமான உத்தரவை கடிதமாக அனுப்பியுள்ளது. இந்த உத்தரவில் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் ஒழுங்கு சார்ந்த பல வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.
கல்வித்துறை புதிய உத்தரவு வெளியீடு
இந்த புதிய உத்தரவில், பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணைய குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பயிற்சிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் மற்றும் சாரணியர் போன்ற மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகள் பள்ளி நாட்களில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




உடற்கல்வி ஆசிரியர்கள் 30 நிமிடங்களுக்கு முன் பள்ளிக்கு வர வேண்டும்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் நேரத்திற்கு வருகை தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி தொடங்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் வருகை தர வேண்டும். அவர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டு உடற்பயிற்சி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்
மேலும், ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்தில் இரண்டு உடற்கல்வி நேரங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அந்த நேரங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை விளையாட்டுகளில் ஈடுபடச் செய்ய வேண்டும். அதோடு வாரத்தில் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு, ஐந்தாவது பாடவேளையில் 20 நிமிடங்கள் மாணவர்கள் சிறார் இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பள்ளி நூலக நூல்களை வாசிக்க ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் மூலம் மாணவர்களின் ஒழுங்கு, உடற்திறன் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கத்தில் பள்ளிகள் இன்று இருந்து செயல்படவிருக்கின்றன.