மதுரை அருகே இந்த 2 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Madurai High Court Bans Toll Collection : மதுரை அருகே எலியார்பத்தி மற்றும் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரம் சுங்கசாவடிகளில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை எனக்கூறி இரண்டு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை, ஜூன் 3, 2025: மதுரை (Madurai) மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயங்கிவரும் இரண்டு முக்கிய சுங்கச் சாவடிகளில் (Toll Gate), சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாகத் தடைசெய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்துள்ளது. மதுரை அருகே அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாததால் விபத்துகள் அதிகரித்திருப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது. அதே போல தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரம் சுங்கசாவடி முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இரண்டு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இரண்டு சுங்கச்சாவடிகளும் முறையாக பராமரிக்கப்படும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை அருகே 2 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை
வழக்கின் விசாரணை ஜூன் 3, 2025 அன்று நடைபெற்ற போது, நீதிபதிகள், “அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும்போது, பொதுமக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமல்ல” என்று சுட்டிக்காட்டினர். மேலும், சாலை அமைப்பதுடன், மரம் வளர்ப்பது, தூய்மை, நிழல் வசதி போன்றவை சரிவர செய்யப்படாத நிலையில் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இரு சுங்கச் சாவடிகளிலும் உடனடியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு, சாலை அமைப்புப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் முறையாக நிறைவேற்றப்படும் வரை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் – மதுரை சாலையில் புதிய நெடுஞ்சாலை
The 45 km long Oddanchatram-Madathukulam section on NH-83 in #TamilNadu has reduced travel time for commuters between #Coimbatore and #Madurai. It has also enhanced logistics efficiency and attracted investments to the industrial towns along the corridor. #BuildingANation pic.twitter.com/9GSvSeWsVQ
— NHAI (@NHAI_Official) June 3, 2025
மோசமான சாலை குறித்து புகார்
மேற்சொன்ன இந்த 2 சுங்கச் சாவடிகளிலும் சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பயணிகளின் புகார்களுக்கு தீர்வாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு அமைந்துள்ளது. இந்த உத்தரவை பலரும் சமூக வலைதளங்களில் வரவேற்று வருகின்றனர். மேலும் மோசமான சாலைகளை பராமரிக்கும் மற்ற சுங்கச்சாவடிகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளின் செயல்பாடு மற்றும் பொது சாலைகளின் பராமரிப்பு நிலையை சுட்டிக்காட்டும் முக்கிய வழிகாட்டி தீர்ப்பாக கருதப்படுகிறது. மக்கள் நலன் மற்றும் சாலைகளின் தரத்தை முன்னிறுத்தும் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.