சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு… எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் இயக்கம் தொடக்கம்!
Suburban Train Services: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 3) முதல் வழக்கம் போல மின்சார ரயில்கள் இயக்க தொடங்கின. இதே போல, 44- க்கும் மேற்பட்ட ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டன.

எழும்பூரில் மின்சார ரயில்கள் சேவை தொடக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11- ஆவது பிளாட்பார்ம்களில் மறு சீரமைப்பு பணி மற்றும் தண்டவாள பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 2- ஆவது வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் கூடுவாஞ்சேரி வரை செல்லும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு இருந்தது. மேலும், பிளாட்பார்ம் 10 மற்றும் 11- க்கு மாற்றாக 5 மற்றும் 6- ஆவது பிளாட்பார்ம்களில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மின்சார ரயில்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை
ஆனால், ரயிலை விட அரசு பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக இருந்ததன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் பிளாட்பார்ம்கள் மறு சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஏப்ரல் 4- ஆம் தேதி அதிகாலை முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த பணிகள் அதற்கு முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டன. இதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) முதல் சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் கடற்கரை- அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் அனைத்து மின்சார ரயில்களும் தடை இன்றி இயக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..
44- க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவை
இதே போல, எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி காரணமாக பகுதி அளவு ரத்து செய்யப்பட்டிருந்த 44- க்கும் மேற்பட்ட ரயில்கள் இனி முன்பு இருந்ததைப் போல சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை இயங்கும். சென்னை மாவட்டத்தில் எழும்பூர் சந்திப்பு ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கிருந்து, தினந்தோறும் வட, தென் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு
இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பயணிகள் ரயில் சேவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தற்போது, அந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் சேவை இயல்பு நிலையை அடைந்துள்ளது. இதனால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மேலும் படிக்க: தமிழக வானிலை அப்டேட்: எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?