தடம் புரண்டு விபத்துக்குள்ளான முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!
Muthunagar Express Train Derailed In Chennai | சென்னையில் முத்துநகர் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், போக்குவரத்து சேவையில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளது.

தடம் புரண்ட ரயில்
சென்னை, ஜனவரி 06 : சென்னை (Chennai) சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே பணிமனையில் இருந்து நேற்று (ஜனவரி 05, 2026) மாலை முத்துநகர் அதிவிரைவு ரயில் (Muthunagar Express Train) எழும்பூர் (Egmore) ரயில் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தடம் புரண்டது தெரிய வந்த உடனேயே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முத்துநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தடம் புரண்டு விபத்துக்குள்ளான முத்துநகர் அதிவிரைவு ரயில்
இந்த ரயில் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தடம் புரண்ட பெட்டிகள் சிறிது நேரத்திற்குள்ளாகவே சரிசெய்யப்பட்டு மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டன. பின்னர் அந்த ரயில் எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைந்தது.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மேல்முறையீட்டு மனு வழக்கில் இன்று தீர்ப்பு!
விசாரணை மேற்கொண்டு வரும் ரயில்வே அதிகாரிகள்
சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். குறைந்த செலவில் மிக அதிக தூரம் மற்றும் விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் சாமானிய மக்களின் முதன்மை தேர்வாக ரயில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னையில் ரயில்கள் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பணிக்கும் செல்லும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பரவலகாக ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : கடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் இத்தகைய முக்கிய போக்குவரத்து சேவையாக ரயில்கள் உள்ள நிலையில், ரயில் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது ஏராளமான பொதுமக்களுக்கு பாதிப்பாக மாறிவிடும். ஆனால், தடம் புரண்ட இந்த ரயில் விரைவில் சரிசெய்யப்பட்ட நிலையில், எந்த வித சிக்கல்களும் இன்றி ரயில் போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.