கைதி லாக் அப் மரண வழக்கு.. மூளையில் ரத்த கசிவு- 28 இடங்களில் காயம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
Akash Custodial Death: சிவகங்கை மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் மர்ம மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், அவரது மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மானாமதுரை கைதி மர்ம மரண வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். இவர் அந்த பகுதியை சேர்ந்த இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை கைது செய்தனர். அப்போது, ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது பாலத்தில் இருந்து குதித்த ஆகாசுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்காக போலீசார் ஆகாசை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆகாசை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த ஆகாசின் உடல் கூராய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.
ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம்
இதில், ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இதில், கை, கால் பகுதி, முழங்கை மற்றும் தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவப்பு நிறச் சிறாய்ப்புகள் மற்றும் ஆழமான கீரல்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் அவரது வலது காலின் நடுப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததுடன், அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும், கால் பகுதியில் தசை மற்றும் நரம்பு, ரத்த நாளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இருதயம் மற்று நுரையீரல் ஆகிய உறுப்புகள் ரத்தம் கட்டி வீங்கி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் முதல்முறையாக.. கேஸ் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..
கல்லீரல்- சிறுநீரகம் குறித்த பரிசோதனை
இருந்தாலும், ஆகாஷ் உயிரிழப்புக்கான சரியான காரணத்தை தற்போதே உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், ரசாயன பகுப்பாய்வு மற்றும் உடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள திசு பரிசோதனை முடிவுகள் ஆகியவை கிடைத்த பிறகே உடற்கூறாய்வின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்காக ஆகாஷின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு மதுரையில் உள்ள மண்டல அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் அளித்திருந்து ரிமாண்ட் ரிப்போர்ட்
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன்பு ரிமாண்ட் ரிப்போர்ட் வாக்குமூலங்கள் வெளியாகி இருந்தன. அதில், போலீசார் தனது காலின் கனுக்கால் பகுதியிலும், முட்டியின் கீழ் பகுதியிலும் இரு கற்களை கட்டு வைத்து, இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினர். அதில், எனது கால் எலும்பு முறிந்தது என்று தெரிவித்திருந்தார். இந்த வாக்கு மூலமும் ஆகாஷை போலீசார் சித்தரவதை செய்து கொடூரமாக கொலை செய்திருப்பது உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருச்சியில் மாணவர்களிடயே மோதல்.. 13 வயது சிறுவன் பலி – பரபரப்பு சம்பவம்