“விஜய் என்னும் ஆளுமை”.. இயக்கமாக தொடங்கி முதலமைச்சர் மகுடம் வரை.. ஒரு ரீவைண்ட்!
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்த விஜய், தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விசில் சின்னத்துடன் களம் கண்ட தமிழக வெற்றி கழகம், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவைப் பெற்றது. குறிப்பாக, வட தமிழகத்திலும் சென்னை மண்டலத்திலும் திமுகவின் கோட்டைகளைத் தவெக தகர்த்தது.

தவெக தலைவர் விஜய்
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக மாறியுள்ளது. சுமார் 60 ஆண்டுகால இருதுருவ அரசியலை (திமுக – அதிமுக) ஒரு தனி மனிதன் தனது நிதானமான நகர்வுகளாலும், மக்களின் மீதான அக்கறையாலும் மாற்றிக்காட்டி ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறார். 2024-ல் ஒரு விதையாகத் தொடங்கி, 2026-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று அரியணை ஏறுகிறார். விஜய்யின் அரசியல் பயணம் 2024ல் தொடங்கவில்லை; அது 2009-ல் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற சமூக அமைப்பாக உருவெடுத்தபோதே தொடங்கிவிட்டது. இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்த அவர், அமைதியாகத் தனது அடித்தளத்தை அமைத்தார்.
இதையும் படிக்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்
மாணவர்களை கெளரவித்த விஜய்:
குறிப்பாக 2023-ல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து கௌரவித்தார். “படியுங்கள், தலைவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்” என்று அவர் மாணவர்களுக்கு ஆற்றிய உரை, இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாளைய தீர்ப்பை” எழுதப்போவது இன்றைய இளைஞர்களே என்பதை அந்த மேடையில் அவர் மறைமுகமாக உணர்த்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, விலையில்லா விருந்தகம், நூலகங்கள் என சமூகப் பணிகளால் மக்களின் கவனத்தை சைலண்டாக ஈர்த்து வந்தார்.
2024ல் உதயமானது தமிழக வெற்றி கழகம்:
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய தத்துவத்தை ஏந்தி, பிப்ரவரி 2, 2024 அன்று தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சினிமா பயணத்தை முழுமையாகத் துறந்து, மக்களுக்காகப் பணியாற்றப் போவதாக அவர் எடுத்த முடிவு இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது. கட்சியின் கொள்கைகளையும், தனது அரசியல் நிலைப்பாட்டையும் அறிவிக்க விக்கிரவாண்டியில் அக்டோபர் 27, 2024ல் பிரம்மாண்டமாக முதல் மாநாட்டை நடத்தினார். சுமார் 8 லட்சம் பேர் திரண்ட அந்த மாநாட்டில், மதச்சார்பற்ற சமூக நீதியே கட்சியின் கொள்கை என முழங்கினார். பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரைத் தனது அரசியல் வழிகாட்டிகளாக அறிவித்தார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் ஒரு பக்கம் என்றால், ஊழல் செய்பவர்கள் மறுபக்கம்” என திராவிட மற்றும் தேசியக் கட்சிகளைச் சாடினார்.
அரசியல் பயணத்தில் ஒரு பெரும் வடு:
விஜய்யின் அரசியல் பயணம் பூக்களால் ஆனது அல்ல. தொடர்ந்து, ஆக.2025ல் மதுரையில் இரண்டாம் கட்ட மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார். அதன்படி, செப். 2025ல் திருச்சியில் இருந்து ‘தமிழக வெற்றி பயணம்’ என்ற மாபெரும் பிரச்சாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 27, 2025 அன்று அவரது 38 மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கரூரில் (வேலுசாமிபுரம்) நடைபெற்ற ‘மக்களைச் சந்திப்போம்’ பேரணியில் ஒரு பெரும் துயரம் நிகழ்ந்தது. விஜய்யைப் பார்க்கக் கூடியிருந்த லட்சக்கணக்கான கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஒரு மாதக்கால முடக்கத்திற்கு பின்னர் மீண்டும் தனது அரசியல் பயணத்தை படிப்படியாக தொடங்கினார்.
2026 தேர்தல் களம்: ஒரு பெரும் புயல்
2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்த விஜய், தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விசில் சின்னத்துடன் களம் கண்ட தமிழக வெற்றி கழகம், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவைப் பெற்றது. குறிப்பாக, வட தமிழகத்திலும் சென்னை மண்டலத்திலும் திமுகவின் கோட்டைகளைத் தகர்த்து 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையும் படிக்க : அதிமுகவுக்கு ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை – எம்.ஏ.பேபி விளக்கம்
இன்று புதிய வரலாறு படைக்கும் விஜய்:
தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, திரையுலகில் இருந்து வந்து மக்கள் செல்வாக்குடன் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்த மூன்றாவது பெரும் ஆளுமையாக விஜய் உருவெடுத்துள்ளார். சரியாக இன்று, மே 10, 2026 அன்று சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அவர் பொறுப்பேற்கிறார்.