தள்ளிப்போகும் ஐபிஎல் போட்டிகள்? வெளியான தகவல் – எப்போது தெரியுமா?
IPL 2026 : டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறுதிப்போட்டி மே 31, 2026 அன்று நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26, 2026 அன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அணிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் காரணமாக அட்டவணை மாற்றம்
வழக்கமாக இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை மாற்றப்படுவது நடைமுறையில் இருந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்களை முன்னிட்டு போட்டி அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : சேப்பாக்கத்தில் சிக்சர் மழை.. சாதனைகளைத் தகர்த்து சரித்திரம் படைத்த இந்திய அணி..
இந்த ஆண்டும் இதே முறையை பின்பற்றலாமா அல்லது தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை அறிவிக்கும்வரை காத்திருக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க ஐபிஎல் நிர்வாகக் குழு விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐபிஎல் 2026 தொடக்க போட்டிகள் நடைபெறும் இடம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக மார்ச் 26, 2026க்கு பதிலாக 2 நாட்கள் கழித்து மார்ச் 28, 2026 அன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கலாம் என்றும் விவாதிக்கப்படவுள்ளது.
பெங்களூருவில் போட்டி நடைபெறுமா?
நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க போட்டியில் விளையாட இருப்பதால் அந்த போட்டி எங்கு நடைபெறும் எனவும் தற்போது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்தலாமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றலாமா என்பது குறித்து கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சொந்த மைதானத்தில் நடைபெறும் ஆர்சிபி அணியின் 7 போட்டிகளும் திட்டமிட்டபடி அதே மைதானத்தில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க : T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக இமாலய வெற்றி.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் என்னென்ன?
இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் அலோசனை கூட்டத்தில் அனைத்து விவரங்களையும் இறுதி செய்து முழுமையான போட்டி அட்டவனையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் 3 மாநில தேர்தல்களுக்கு நடுவே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.