இந்தி திணிப்பை எதிர்த்து போராடியவர் உயிரிழப்பு.. “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்”.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..
CM MKStalin expresses condolences: மே 17 இயக்கத்தினர் இந்தியை திணிக்காதே, தமிழை அழிக்காதே, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என பல்வேறு முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக சிவா திலீபன், “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என முழக்கமிட்டபடி ரயில் முன் பாய்ந்தார்.

உயிரிழந்த சிவா
சென்னை, மார்ச் 19: இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில், படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்” என உருக்கமான வேண்டுகோள் விடுத்து தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ
ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்:
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக்…
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 18, 2026
அந்தவகையில், உயிரிழந்த சிவா திலீபன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
இனி ஒரு உயிரும் போகக்கூடாது:
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
இரங்கல்களும், ஆறுதல்களும்:
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்தியை திணிக்காதே, தமிழை அழிக்காதே:
கடந்த மார்ச் 11ம் தேதி சென்னையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி தலைமையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. அப்போது அங்கு கூடிய மே 17 இயக்கத்தினர் இந்தியை திணிக்காதே, தமிழை அழிக்காதே, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என பல்வேறு முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக சிவா திலீபன், “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என முழக்கமிட்டபடி ரயில் முன் பாய்ந்தார்.
மேலும் படிக்க : வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..
இதில் பலத்த காயமடைந்த சிவா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்ட ரயில்வே போலீசார் மற்றும் போராட்ட குழுவினர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.