விடுமுறை முடிந்ததும் படிப்பு.. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள்.. அதிரடி உத்தரவு!!
Halfyearly exam holidays: 2025–26 கல்வியாண்டின் 3வது பருவத்திற்குத் தேவையான பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பிவிடப்பட்டுள்ளன. இவை சரியான அளவில் கிடைத்துள்ளனவா என்பது அதிகாரிகள் மூலம் உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் புகைப்பட்ம்
சென்னை, டிசம்பர் 25: பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் நேற்றுடன் (டிசம்பர் 24) முடிந்து, ஜன.4ம் தேதி வரை 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே, அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
பெற்றோர்களுக்கு அறிவுரை:
அதன்படி, மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும். தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு:
2025–26 கல்வியாண்டின் 3வது பருவத்திற்குத் தேவையான பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பிவிடப்பட்டுள்ளன. இவை சரியான அளவில் கிடைத்துள்ளனவா என்பது அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றை விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாணவர்களை பயன்படுத்தக்கூடாது:
புத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்படும் போது, அதற்கான விபரங்கள் விநியோகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விநியோக மையங்களில் இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள், இந்த பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
EMIS தளத்தில் பதிவேற்ற வேண்டும்:
மேலும், 3வது பருவத்திற்கான நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களும் புத்தகங்களைப் பெறும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.