GK Vasan : திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகின்றன.. ஜி.கே.வாசன் கருத்து!
GK Vasan Tiruppur Press Meet | தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (ஜூன் 07, 2025) திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

திருப்பூர், ஜூன் 08 : திராவிட முன்னேற்ற கழகத்திற்கு (DMK – Dravida Munnetra Kazhagam) எதிரான வாக்குகள் அதிகரித்து வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் (Tamil Maanila Congress) கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தகிழகத்தில் அதிக அளவில் வளர்ந்து வருவதாகவும், அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வந்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.வாசன் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூன் 07, 2025) திருப்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் பேசிய அவர், பாஜக தமிழகத்தில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வந்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் தமிழகத்தில் வருவது கட்சியினருக்கு ஊக்கமும் ஆகமும் கொடுக்கும். அதிமுக, பாஜக, தமாக மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வலுவான கூட்டம் ஆட்சி மாற்றமே எங்களுடைய நோக்கம். இந்த நோக்கத்துக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து பணியாற்றி ஆட்சி மாற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் வேதனையான சாதனையை தான் பார்க்க முடிகிறது – ஜி.கே.வாசன்
அப்போது திமுக குறித்து பேசிய ஜி.கே.வாசன் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் வேதனையான சாதனையை தான் பார்க்க முடிகிறது. மக்களுக்கான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு பாலியல் கொடுமை, போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த காவல்துறையாலும் முடியவில்லை. அரசின் செயல்பாடு இல்லை. இன்னும் பத்து மாதங்களில் எப்படி சரி செய்ய முடியும் என்று அவ நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.