தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம்.. ஏஜென்சிகளில் மக்கள் முற்றுகை.. முடங்கிய ஆன்லைன் புக்கிங்!
LPG Panic Booking: முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இணையவழி முன்பதிவு தோல்வியடைவதால், பொதுமக்கள் தங்களுக்கு விநியோகம் செய்யும் கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்ய முயல்கின்றனர். ஆனால், அங்கேயும் சர்வர் பிரச்சனைகளைக் காரணம் காட்டி ஊழியர்கள் ஆன்லைனில் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.

கேஸ் ஏஜென்சிகளில் அலைமோதும் மக்கள்
சென்னை, மார்ச் 14: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், தமிழகத்தின் சமையல் எரிவாயு விநியோகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வர்த்தக சிலிண்டர்களைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவியுள்ளது. இதனால், பலரும் தங்களது தேவையை முன்கூட்டியே பூர்த்தி செய்ய ஒரே நேரத்தில் முன்பதிவு (Booking) செய்ய முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, எரிவாயு நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகளில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகள் (Network Issues) ஏற்பட்டுள்ளன. போன் மூலம் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: ‘கேஸ்’க்கு தனி ரேட்.. ஹோட்டல்களில் உயர்ந்த உணவுகளின் விலை.. ஷாக் கொடுக்கும் சென்னை நிலவரம்!
ஏஜென்சிகளில் அலைமோதும் கூட்டம்:
இணையவழி முன்பதிவு தோல்வியடைவதால், பொதுமக்கள் தங்களுக்கு விநியோகம் செய்யும் கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்ய முயல்கின்றனர். ஆனால், அங்கேயும் சர்வர் பிரச்சனைகளைக் காரணம் காட்டி ஊழியர்கள் ஆன்லைனில் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். இது ஒருபுறம் என்றால், ஏற்கனவே புக்கிங் செய்து OTP குறுஞ்செய்தி வந்த நபர்களுக்குப் பல நாட்களாகியும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாததால், அந்த வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சிகளை வந்து முற்றுகையிடுகின்றனர். இன்னும் 5 நாட்களுக்குள் சிலிண்டர் வந்துவிடும் என்று கூறி ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.
வாடிக்கையாளர்களின் குமுறல்:
கடந்த 12 நாட்களுக்கு முன்பே புக் செய்தும் இன்னும் சிலிண்டர் வரவில்லை. ஓடிபி (OTP) வந்தும் விநியோகம் செய்யப்படாமல் இழுத்தடிக்கின்றனர்,” என கேஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட பயனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு சிலர், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு என்ற செய்தி பார்த்த நாள் முதலே, வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை புக் செய்து பார்க்கிறோம். இதுவரை எங்களால் சிலிண்டர் புக் செய்யவே முடியவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கின்றனர்.
அதாவது, மக்களிடையே ஏற்பட்ட அச்சம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக புக்கிங் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் புக் செய்தவர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், அதிகளவில் மக்கள் ஒரேசமயத்தில் புக்கிங் செய்ய முயற்சி செய்வதால், தங்கள் தொலைபேசி எண்கள், ஆன்லைன் சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
இதையும் படிக்க: டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!
இயல்பாக இயங்கிய ஆட்டோ கேஸ் நிலையங்கள்:
சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டோ, கார்களுக்கான சிஎன்ஜி கேஸ், எல்.பி.ஜி. கியாஸ் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கூட்டம் இன்றி, இயல்பான எண்ணிக்கையில் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் வந்து கியாஸ் நிரப்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. சென்னையைப் பொறுத்தவரையில் LPG கேஸ் விலை லிட்டருக்கு ரூ.58.78 என ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், LPG கியாஸ் விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் ரூ.69.74-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் CNG கேஸ் ஆனது ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கிலோ ரூ.91.50-க்கு எவ்வித விலைமாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.