வணிக சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் ஹோட்டல் உணவுகளின் விலை திடீர் உயர்வு.. மக்கள் அவதி..
Sudden Hike in Food Prices at chennai Hotels: சென்னையில் ஹோட்டல்களில் உணவுகளின் விலைகள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தினமும் ஹோட்டல் உணவு சாப்பிடுபவர்கள் இந்த விலையேற்றத்தால் அவர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

உணவுகளின் விலை திடீரென உயர்வு
சென்னை, மார்ச் 13: வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு சிலிண்டருக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு, மாநில அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதனை முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டீ-காபி பிரியர்களுக்கு பேரதிர்ச்சி… நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்வு!
ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு:
அந்தவகையில், கடந்த சில நாட்களாக சென்னையில் வணிக கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் பல இடங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகளை குறைத்து விட்டனர். பல ஹோட்டல்களில் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரம் இயங்குவதை பெரும்பாலான ஹோட்டல்கள் தவிர்த்துள்ளன. சிலிண்டருக்கு பதிலாக விறகு அடுப்புகளுக்கும், இண்டக்ஷன் அடுப்புகளுக்கும் மாறி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் இண்டக்ஷன் அடுப்புகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உணவு வகைகளின் விலை உயர்வு:
இந்த நிலையில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவுகளின் விலையை நேற்று முதல் திடீரென உயர்த்தியுள்ளனர். அந்த வகையில் சப்பாத்தி, பரோட்டா, கல் தோசை ஆகியவற்றை தலா ரூ.20ல் இருந்து ரூ.5 உயர்த்தி ரூ.25 ஆகவும், ஒரு நைஸ் தோசை ரூ.50ல் இருந்து ரூ.10 உயர்த்தி ரூ.60 ஆகவும், பிரைடு ரைஸ்க்கு ரூ.10ம் உயர்த்தியுள்ளனர். பெரிய ஹோட்டல்களில் உணவு விலைகளை ஏற்றி அதற்கு ஏற்ப பில்லையும் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சில ஹட்டல்களில் உணவுகளின் விலைகள் எதுவும் ஏற்றப்படவில்லை. இதே போல ஏற்கனவே விறகு அடுப்புகளில் தயாரிக்கக்கூடிய உணவுகளில் விலைகள் எதுவும் ஏற்றப்படவில்லை என்று ஒரு சில வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு
வாடிக்கையாளர்கள் கடும் அவதி:
ஹோட்டல்களில் உணவுகளின் விலைகள் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தினமும் ஹோட்டல் உணவு சாப்பிடுபவர்கள் இந்த விலையேற்றத்தால் அவர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக எழும்பூரில் சில சாலையோர தள்ளுவண்டி கடைகளை வியாபாரிகள் மூடிவிட்டனர். வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சிலிண்டர் விநியோகம் சீரானதும் ஹோட்டல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.