CM Stalin: வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் தொகுதி மறுவரையறை திட்டம் பாஜகவின் வஞ்சகமான செயல் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இது தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தென் மாநிலங்களின் குரலைக் காக்க வியூகங்களைத் தீட்ட வேண்டிய தருணம் இது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CM Stalin: வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

Updated On: 

06 Jun 2025 19:51 PM

தமிழ்நாடு, ஜூன் 6: மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நிகழும் தாமதம் தற்செயலானவை அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,  “நான் தொடக்கம் முதலே எச்சரித்தும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்துவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறு வரையறை தற்செயலானவை கிடையாது. மத்திய பாஜக அரசு செயல்படுத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரையறை திட்டமானது வஞ்சகம் நிறைந்தது. இதில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளது.

நான் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம்


அதே சமயம் மக்கள் தொகை கட்டுப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளாக காற்றில் பறக்க விட்ட மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களை பெற உள்ளது. அமைதியான இந்த நடவடிக்கை ஆனது கூட்டாட்சியின் சமநிலையை சீர்குலைத்து பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.  மேலும் இந்த சதி திட்டம் குறித்து நான் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.  தற்போது மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும் பாஜக எப்படி இந்த கைவரிசியை காட்டப்போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல் தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்ட வேண்டிய தருணம் இதுவாகும்.

தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்

1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் போய், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் தான் அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறு வரையறைக்கு அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தனக்கு சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பாஜக நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால் தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்கு குறைந்துவிடும்.  அதிமுக போன்ற அடிமை துரோகிகள் தங்களின் சுயநலத்திற்காக பாஜக முன் மண்டியிட்டாலும் திமுகவின் தலைமையில் தமிழ்நாடு ஓரணியில் திரளும். நம் மாநிலம் வளர்ச்சிக்காக தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.