Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மழையால் குறையும் வெப்பநிலை.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 58% வழக்கத்தை விட அதிகமான மழை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மழையால் குறையும் வெப்பநிலை.. சென்னையில் எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 13, 2025: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 13, 2025 தேதியான இன்று முதல் நவம்பர் 15, 2025 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் 16, 2025 அன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 17, 2025 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 58% வழக்கத்தை விட அதிகமான மழை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. சில மாவட்டங்களில் மட்டுமே கனமழை பதிவாகி வருகிறது.  நவம்பர் 18, 2025 அன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் மட்டும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நாய் கடித்ததை கண்டுகொள்ளாத தொழிலாளி – ரேபிஸால் உயிரிழப்பு – நெல்லையில் சோகம்

குறையும் வெப்பநிலை:


தமிழகத்தில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில், அதிகபட்ச வெப்பநிலை கரூர் மாவட்டத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 32.6 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 32 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 31.7 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 32 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 33 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 34 டிகிரி செல்சியஸ், கடலூரில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: மனிதாபிமானமற்ற செயல், போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக 32.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட 4.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.