அவலாஞ்சியில் பதிவான 35 செ.மீ மழை.. கோவை, நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்..
Weather Report: தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவலாஞ்சியில் ஒரே நாளில் 35 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வானிலை அறிக்கை, மே 26: தென்மேற்கு பருவமழையானது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மே 26 2025 தேதியான இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை:
தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி இருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் அனேக இடங்களில் மழை கொட்டி வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்திலும் கடந்து சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழையானது தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய உள் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மேல் பவானி நீலகிரி மாவட்டத்தில் 30 சென்டிமீட்டர் மழையும் சின்ன கல்லார் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 21 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழையின் பொழுது கோவை நீலகிரி கன்னியாகுமரி தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது
கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக பல அணைகள் நிரம்பி வருவதால் அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ள நிலையில் மே 30 2025 வரையில் தமிழகத்தின் அநேக இடங்களில் குறிப்பாக கோயம்புத்தூர், திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது