சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி.. மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
Chennai Suburban Train Services: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு கட்டங்களாக மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இங்கிருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களின் சேவை மற்றும் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்து முழு விவரம் இதோ.

சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11- ஆவது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக புறநகர் ரயில் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் வருகிற பிப்ரவரி 20- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு வரை சுமார் 45 நாட்களுக்கு 5 மற்றும் 6- ஆவது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
6- ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்
இதே போல, சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் 6- ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், அரக்கோணம்- காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- தாம்பரம்- கடற்கரை மார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரயில்களும் இதே நாட்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 5- ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதில், மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதற்காக, ரயில்களின் எண்கள் மற்றும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொலை வழக்கு.. 21 பேருக்கு முதலில் விடுதலை.. பின்னர் ஆயுள் தண்டனை.. 13 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!
புதிய அட்டவணையுடன் ரயில்கள் இயக்கம்
தற்போது உள்ள மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார ரயில்கள் எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த 45 நாட்களில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது. புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து 84 மின்சார ரயில்களும், செங்கல்பட்டு- தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 80 ரயில்களும் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளது. தற்போது வரை 10 மற்றும் 11- ஆவது நடைமேடையில் 324 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில், 160 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை
மின்சார ரயில்களுக்காக நடைமேடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம்- சேது ரயில் மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும், வேளச்சேரி- பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதே போல, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ரயில் நிலையமானது மார்ச் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் கள.. அடுத்த மாதம் இரண்டு முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. தே.ஜ கூட்டணியில் வியூகம் என்ன?