வேலூர்: 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி வீணாகும் பேருந்து நிலைய நிழற்கூடம்
Odugathur Bus Shelter: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலைய நிழற்கூடம் நிழற்கூடம் கடந்த 5 வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலை தொடர்கிறது. பாதை குறுகியதாலும் இடவசதி இல்லாததாலும் பஸ்கள் நிழற்கூடம் அருகே செல்லவில்லை. பயணிகள் பழைய நிலையத்திலேயே காத்திருக்கின்றனர்.

5 ஆண்டுகளாக பயன்பாடின்றி வீணாகும் பேருந்து நிலைய நிழற்கூடம்
வேலூர் ஜூன் 13: வேலூர் மாவட்டம் (Vellore) ஒடுகத்தூரில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய நிழற்கூடம் (New bus stand shelter) 5 ஆண்டுகளாகும் போதும் பயன்பாட்டில் வரவில்லை. பாதை குறுகியதாலும், இடவசதி இல்லாததாலும் பேருந்துகள் இங்கு செல்லவில்லை. இதனால் பயணிகள் (Bus Passengers) வெயிலும் மழையிலும் பழைய நிலையத்திலேயே காத்திருக்கின்றனர். புதிய நிழற்கூடம் இரு சக்கர வாகன நிறுத்தமாகவும், பூக்கூடமாகவும் மாறியுள்ளது. பொதுமக்கள் சாலை விரிவாக்கம் செய்து பஸ்கள் நிற்கும் வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சி அலுவலர் (Town Panchayat Officer) நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒடுகத்தூர் பேருந்து நிலைய நிழற்கூடம்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலைய நிழற்கூடம் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் CGF திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. ஒடுகத்தூர் பகுதி மேல் அரசம்பட்டு, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக இருந்தாலும், இந்த நிழற்கூடம் கடந்த 5 வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலை தொடர்கிறது.
5 ஆண்டுகளாக பயன்பாடின்றி வீண்
பேருந்துகள் வந்து செல்லும் பாதை குறுகியதாகவும், போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய நிழற்கூடத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதனால் பேருந்துகள் பழைய நிலையத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. புதிய நிழற்கூடம் அருகில் இரு சக்கர வாகனங்கள் நிற்கும் இடமாகவும், பூக்கள் கட்டும் கூடமாகவும் மாறியுள்ளது.
பயணிகளின் அவல நிலை
வெயிலும் மழையிலும் பேருந்துகள் பழைய நிலையத்தில் மட்டுமே நிற்கின்றன. பயணிகள் நிழலை நாடி கடைகள் மற்றும் கோயில்கள் அருகே காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் நிழற்கூடம் அருகே நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறைவதால், பேருந்துகளுக்கு நிற்கும் இடமே இல்லை என்ற குறையும் கிளம்பியுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
பொதுமக்கள் கூறுகையில், “புதிய நிழற்கூடம் சரியான இடத்தில் கட்டப்படவில்லை. பேருந்துகளுக்கு இடவசதி இல்லை. சாலை வசதியின்றி பயணிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிழற்கூடம் பயன்பாட்டிற்கு வர, சாலை விரிவாக்கம் மற்றும் பஸ்கள் செல்லும் வழியை சரிசெய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
பேரூராட்சி அதிகாரியின் விளக்கம்
இது குறித்து ஒடுகத்தூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பதிலளிக்கையில், “புதிய நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் சாலை வசதி மேம்பாட்டும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார். பொது நலன் கருதி கட்டப்பட்ட நிழற்கூடம், திட்டமிடலில் ஏற்பட்ட தவறால் ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. தற்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.