அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை.. எப்போது தொடங்கும்? எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை?
Tamil Nadu Weather: குமரி கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை நவம்பர் 28ஆம் தேதி முதல் தொடங்கி படிப்படியாக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமாகும்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், நவம்பர் 26, 2025: மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழமைச் சுழற்சியின் காரணமாக நவம்பர் 25 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று, அதாவது நவம்பர் 26 அன்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும், நவம்பர் 27 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும்:
குமரி கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை நவம்பர் 28ஆம் தேதி முதல் தொடங்கக்கூடும். முதன்முதலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்களில் மழை பதிவு தொடங்கி, பின்னர் வட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
அந்த வகையில், நவம்பர் 26 இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
நவம்பர் 28ஆம் தேதி:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி:
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி:
திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட நிலையில், அதன் தீவிரம் வரவிருக்கும் நவம்பர் 29ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.